Saturday, July 5, 2008

சரித்திரம் சரிகிறதே!


காந்தி பிறந்தமண்
இரத்தக்கறை படியக் கிடக்கிறதே!
சாந்தி தவழ்ந்த மண்ணின்
சரித்திரம் சரிகிறதே!

தியாகத் தலைமுறையை
தீப்பந்தம் மறைக்கிறதே!
அபாயம் நீங்கி - நல்ல
அமைதியை மனம் நாடிடுதே!

கடவுளின் பெயராலே
கலகங்கள் நடக்கிறதே!
மதவெறி தலைதூக்கி
மனிதநேயத்தை அழிக்கிறதே!

விஞ்ஞான இரகசியங்கள்
விலைபேசப் படுகிறதே!
மெய்ஞான மடங்களிலே - தேசம்
மண்டியிட்டுக் கிடக்கிறதே!

அரசியல் கழிசடைகளால் - நாடு
அசிங்கமாகிப் போனதே!
சரித்திரச் சின்னங்கள்
சரிக்கப்பட்டு கொண்டிருக்கிறதே!

விருப்பு வீழ்கிறதே!
வெறுப்பு வளர்கிறதே!
அகிம்சை தளர்கிறதே!
இம்சை துளிர்க்கிறதே!

ஆக்கம்: இனியவன் ஹாஜி முஹம்மது

இஸ்லாமியப் புனித நூற்களின் பன்முக வாசிப்பு



சென்ற ஏப்ரல் 22, 23 - 2008, தேதிகளில் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் ``மதங்கள், தத்துவங்கள் மற்றும் மனிதாயச் சிந்தனை களுக்கான'' துறையின் சார்பில் ``மதப் புனித நூற்களை வாசிப்பது மற்றும் விளக்கமளிப்பது'' குறித்து ஆய்வரங்கம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் முனைவர் முத்துமோகன். வழக்கம்போல இஸ்லாமியப் புனித நூற்களின் பன்முக வாசிப்பு என்றே தலைப்பு எனக்கு அளிக்கப்பட்டது. சற்று எச்சரிக்கையோடும், மிகுந்த கவனமாகவும் செய்ய வேண்டிய பணி என்றபோதிலும் உவந்து அதை ஏற்றுக் கொண்டேன்.

ஏனெனில் இஸ்லாம் குறித்தும், முஸ்லிம்கள் குறித்தும் இங்கே நிலவுகிற அறியாமைகளில் ஒன்று - இஸ்லாம் இறுக்கமான ஒற்றைக் கருத்துடைய மதம் என்பது. ஆனால் முஸ்லிம்களுக்குள் எந்தப் பிரச்சினையிலும் ஒன்றைக் கருத்து கிடையாது என்பதும், ஏராளமான வாதங்கள் உள்ளுக்குள் நடைபெற்றுக்கொண்டுள்ளன என்பதும், பெண்ணியர்கள் தொடங்கி பின் நவீனத்துவவாதிகள் வரை ஏராளமான பல புதிய வாசிப்புகளை முயன்று கொண்டுள்ளனர் பலரும் பல முஸ்லிம்கள் உட்பட கவனத்தில் கொள்ளாத, கவனத்தில் கொள்ள விரும்பாத ஒரு உண்மை. இரண்டாண்டுகளுக்கு முன்னர் வட மாநிலம் ஒன்றில் இம்ரானா என்கிற பெண் தன் மாமனாராலேயே வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டதாக எழுந்த புகாரில் அளிக்கப்பட்ட `ஃபத்வா' குறித்து இங்கு எழுந்த விவாதங்கள் இதைப் புரிந்து கொள்வதற்கான ஒரு சமீபத்திய எடுத்துக்காட்டு. மிகவும் மதிக்கப்பட்ட ஆயத்துல்லாஹ் கோமெய்னி, புகழ்பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு எதிராக அளித்த ஃபத்வாவை ஆதரித்த முஸ்லிம்களைக் காட்டிலும் எதிர்த்தவர்களே அதிகம் என்பதும் சிந்தனைக்குரியது.

எனினும் புனித நூற்கள் (Scriprures) வேதங்கள் என்பன பன்முக வாசிப்பிற்குரியவை அல்ல என்பதே மதவாதிகளின் இறுக்கமான கருத்து. ஆனால் யோசித்துப் பார்த்தால் மதங்கள் பன்முக வாசிப்பிற்குட்பட்டே வந்துள்ளமை விளங்கும். அதன் விளைவே மதங்களின் உட்பிரிவுகள். எந்த மதத்தில்தான் உட்பிரிவுகள் இல்லை? வேடிக்கை என்னவெனில் எல்லா மறு வாசிப்புகளும்கூட பன்முக வாசிப்பை மறுதலித்தே வரும். தமது வாசிப்பு ஒன்றே சரியான வாசிப்பு என்று வாதிக்கும் இந்த வகையில் மதங்களுக்கும் அரசியல் கட்சிகளுக்கும் ஓர் ஒப்புமையைக் காண இயலும். இப்படிச் சொல்வதற்காக மதவாதிகளோ இல்லை அரசியல்வாதிகளோ கோபங்கொள்ளத் தேவையில்லை. .இறுக்கமான கோட்பாடுகளின் அடிப்படையில் இயங்கும் (dogmatic) நிறுவனங்களின் தவிர்க்க இயலாத பண்பாக இதைக் கருதலாம்.

வாசிப்பின் பன்முகத் தன்மை என்பது நவீன இலக்கியக் கோட்பாடுகளால் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. `அமைப்பியலுக்குப்' பிந்திய உலகளாவிய கருத்தொருமிப்பு என்றுகூட இதனைச் சொல்லலாம். மொழியின் இடுகுறித் தன்மை (arbitraryren) சொற்களை அர்த்தங்களுடன் இறுக்கமாகக் கட்டிப் போட்டுவிட இயலாது என்கிற கருத்துக்களினடியாக உருவானதே பன்முகவாசிப்பு. வாசிப்பின் ஜனநாயகத்தை முன்வைக்கும் சிந்தனை என்று மட்டுமே இதை நாம் கருத வேண்டியதில்லை. இன்றும் முக்கியமான அறம் சார்ந்த ஒரு பிரச்சினையையும் இது எழுப்புகின்றது. பன்முக வாசிப்புகளில் எதுவும் முதன்மையான ஒன்றாக இருக்க இயலாது என்பதே அது. ஆனால் மாற்று வாசிப்பைச் செய்கிற ஒவ்வொருவரும் நம்முடையதே முதன்மையானது, சரியானது என்கிற கருத்தையே கொண்டுள்ளோம். ``எல்லா வாசிப்புகளும் சமமானவைதான். ஆனால் என்னுடைய வாசிப்பு மற்றவற்றைக் காட்டிலும் ரொம்பச் சமமானது'' என்கிற ஆர்வெலிய அபத்தத்திலிருந்து யாரும் விதிவிலக்கல்ல. சில ஆண்டுகளுக்கு முன்னர், ``அக்கினிக்குஞ்சொன்று கண்டேன். அதை அங்கொரு காட்டிடைப் பொந்தினில் வைத்தேன். வெந்து தணிந்தது காடு. தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?''- என்கிற பாரதியின் புகழ்பெற்ற `தத்துவப்' பாடலுக்கு முற்றிலும் உடலுறவு சார்ந்த ஒரு விளக்கத்தை அளித்து நடைபெற்ற விவாதம் இங்கே கருதத் தக்கது.

சொல்லப்போனால் பிரதி மிகவும் இறுக்கமான அர்த்தங்களின் விளை நிலம்; வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் சொல்லக் கூடியது என்கிற கருத்து மிகவும் நவீனமான ஒரு சிந்தனை. அறிவொளிக் காலத்திற்குப் பின் இது உறுதிப்பட்டது. ஆனால் புனித நூற்கள் தோன்றிய காலத்தில் அப்படியான கருத்து இருந்தது இல்லை. அருளப்பட்ட புனித நூற்களைக் கொண்டிருந்த யூதர், கிறிஸ்துவர், முஸ்லிம் என யாரும் தமது வேதங்கள் உருவாக (allegorical) விளக்கங்களுக்கு உரியன என்கிற கருத்தையே கொண்டிருந்தனர். இறை வார்த்தை அளவற்ற பொருள் நிரம்பியது. ஒற்றை விளக்கத்தில் அதைச் சிறையிட்டு விடக் கூடாது. துல்லியமான விவரங்கள் நிரம்பியதாகவும், வரலாற்றுப் பெட்டகமாகவும், நவீன `விஞ்ஞான' அளவுகோல்களுக்குரியதாகவும் பிரதிகளைக் கருதுவது இன்றைய வழக்கமே. தமது வேதங்களில் செய்யப்பட்டவை இன்றைய விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளோடு பொருந்திப் போவதாகப் பெருமை கொள்ளும் மதவாதிகளைப் பார்க்கும்போது நம்மால் புன்னகைக்காது இருக்க இயலாது. இறை வாாத்தைகட்கு விஞ்ஞான அந்தஸ்து கோருவது எத்தனை முரண்?

இஸ்லாமின் முதன்மைப் புனித நூலாகிய திருக்குர்ஆன் இறைவனால் (அல்லாஹ்) நபிகள் நாயகத்தினூடாக இறக்கியருளப்பட்டது. திருக்குர்ஆனின் வாக்குகள் ஒவ்வொன்றும் `ஆயத்'துகள் என்றே அழைக்கப்படும். அதாவது `‘Parabler’ நீதிக்கதைகள், உருவகக் கதைகள். கவனம் (சொர்க்கம்), நரகம், இறுதித் தீர்ப்பு குறித்த எல்லா வாக்குகளுமே ஆயத்துகள்தான். என்றென்றைக்குமான உண்மைகளைச் சொல்லும் இவற்றை நேரடியாக அர்த்தப்படுத்திக் கொள்ளாமல் குறிகள், குறியீடுகள் மூலமாகவே உருவகித்துக்கொள்ள இயலும் என்பார் இஸ்லாம் குறித்து ஆழமான ஆய்வுகளைச் செய்துள்ள கரேன் ஆர்ம்ஸ்ட்ராங்.

இன்னொன்றையும் அவர் சொல்வார். திருக்குர்ஆன் ஓதுதற்குரியது (recitation). அதை வாசித்து வரிக்கு வரி பொருள் சொல்வதைக் காட்டிலும் காதில் வாங்கி (listen) உள் வாங்குதலே உத்தமம். கவித்துவமிக்க மொழிநடையில் அருளப்பட்டுள்ள திருக்குர்ஆன் ஓதப்படும்போது வெளிப்படும் ஒலிப்பாங்கம் பிற இணையான வாக்குகளுடன் தொடர்பு கொண்டு மனத்தில் உருவாக்கும் உணர்வலைகளே முக்கியம். இப்படியாக உருவாகும் உணர்வலைகள் அமைதி, அன்பு, நீதி, பொறுமை, சகிப்புத்தன்மை மற்றமையை ஏற்றுக் கொள்ளுதல் ஆகியவற்றையே காது கொடுத்துக் கேட்போரின் நெஞ்சில் நெகிழ்விக்கும். மாறாக வரிக்கு வரி பொருள் கொள்வோர் தமக்கு வேண்டிய எதையும் வாசித்துக் கொள்ள இயலும்.

இஸ்லாமின் முதன்மை ஆதார நூற்களாகக் கீழ்க்கண்டவற்றைக் குறிப்பிடலாம்:

1. திருக்குர்ஆன் - இறைவனால் நேரடியாக அருளப்பட்டது.

2. `ஹதீஸ்' மற்றும் `சீறத்'கள். இவற்றில் `ஹதீஸ் என்பன நபிகளாரின் வாழ்வையும், வாக்குகளையும் தொகுத்துச் சொல்பவை. சங்கிலித் தொடராய் பின்னோக்கிச் சென்று யாரால் அறிவிக்கப்பட்டது எனக் கூறுபவை. இப்னு மிஜா (கி.பி.824-856), அல்புஹாரி (820-870), முஸ்லிம் (817-875), அபு தாவுத் (817-889), அத் திர்மிதி (இ.892), அந்நஸயி (830-915) என்பவர்களால் தொகுக்கப்பட்டவை முக்கிய மரபுகளாகக் கருதப்படுகின்றன. `சீறத்'கள் என்பன நபிகளாரின் வாழ்க்கை வரலாற்றைச் சொன்னவை: இப்ன் ஸஅத், இப்ன் இஹ்ஹாக், அல்தபரி ஆகியன தொடக்க கால வரலாற்று நூற்களில் முக்கியமானவை.

3. `ஷரியத்'கள் எனப்படும் முஸ்லிம் சட்ட விதிகள். வளர்ச்சியின் இரண்டாம் கட்டத்தில்-அதன் விரிவாக்க காலத்திய-முக்கிய ஆவணங்கள் (634-925) இவை.

இஸ்லாமியப் புனித வழிபாட்டு ஆவணங்களின் உருவாக்கத்தை கீழ்க்கண்ட காலப் பாகுபாட்டிற்குள் அடக்கலாம்:

(அ) கி.பி.610-632; அருள் வெளிப்பாட்டின் தொடக்கத்திலிருந்து நபிகளின் மரணம் வரை.

(ஆ) 632-634 : முதல் கலீபா அபுபக்கர்- முந்தைய சூழலின் கிட்டத்தட்ட அதே தொடர்ச்சி.

(இ) 634-644 : கலிமா உமர் - இஸ்லாம் புதிய புவிப் பகுதிகளில் பரவத் தொடங்கிய காலம். மாற்றங்களின் தொடக்கம்.

(ஈ) 644-925: புதிய பகுதிகளுக்குப் பரவிய, கலாச்சாரப் பரிமாற்றங்கள் நிறைந்த காலம். இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கும் மதச் சட்டங்களுக்கும் இறுக்கமான வடிவு கொடுக்கப்பட்ட காலம்.

இதை எதற்காக இவ்வளவு விரிவாகச் சொல்கிறேன் எனில் இத்தகைய வரலாற்றுப் போக்கினூடாக உருவாகிக் கையளிக்கப்பட்டுள்ளவையே இன்றைய புனித ஆவணங்கள். இந்த வரலாற்றின் எச்சங்கள் அவற்றில் படிந்திருப்பதையும் அவற்றினூடான மாற்றங்கள், ஒற்றைக் கருத்தின் சாத்தியமின்மை ஆகியவற்றையும் கவனத்தில் நிறுத்துவது அவசியம். இவற்றில் எவற்றை முதன்மைப்படுத்துவது என்கிற அடிப்படையிலேயே இன்று பல உட்பிரிவுகள் சாத்தியமாகியுள்ளன. சில முக்கிய மத உட்பிரிவுகள்: ஷன்னி (மைய நீரோட்டப் பிரிவு எனலாம்), ஷியா (இமாமி/ஸெய்தி), காரிஜ் (இயாதி). வெவ்வேறு `ஹதீஸ்'களை முதன்மைப்படுத்தும் இவர்கள் ஒருவரை ஒருவர் நம்பிக்கைபெற்றவர் (infidels) எனச் சொல்லத் தயங்குவதில்லை. இதற்குள்ளும் எந்தச் சட்ட மரபைப் (law school) பின்பற்றுகிறார்கள் என்பதைப் பொருத்த உட்பிரிவுகள் உள்ளன. ஷன்னி பிரிவில் மட்டும் நான்கு சட்ட மரபுகள் உள்ளன. 1. அபு ஹனீபா (கி.767) வால் உருவாக்கப்பட்ட ஹனபி சட்டம் 2. மாலிக்கால் (இ.795) உருவாக்கப்பட்ட மாலிகி சட்டம் 3. ஷாஃபி (இ.820) சட்டம் 4. கிப்ன் ஹன்ஸால் (கி.855) உருவாக்கப்பட்ட ஹனபாலி சட்டம். எனினும் இவர்கள் ஒருவரை ஒருவர் நம்பிக்கையற்றவர்கள் எனக் குற்றம்சாட்டிக் கொள்வதில்லை. இவை தவிர Technology அடிப்படையிலும் பிரிவினைகள் உள்ளன. சுருக்கம் கருதித் தவிர்ப்போம். இஸ்லாத்திற்குள் நிலவும் பன்மைத் தன்மையின் பால் கவனத்தை ஈர்ப்பதற்காகவே இவ்வளவும்.

இஸ்லாம் இன்று மிகக் கடுமையான எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் சந்தித்துக் கொண்டுள்ளதை அறிவோம். இது இஸ்லாமிற்குள்ளும் மிகப் பெரிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இவை இஸ்லாமியப் புனித நூல்களை பல புதிய வாசிப்பிற்குள்ளாக்குகின்றன. இஸ்லாத்திற்குள் `ஜிஹாத்'திற்கு இடமுண்டு என வாதிக்கும் இஸ்லாமியவாதிகள் ஒருபுறம், `ஜிஹாத்'தில் பயங்கரவாதத்திற்கு இடமில்லை, என `ஃபத்வா' விதிக்கும் தியோபந்திகள் ஒருபுறம், திருக்குர்ஆனில் தந்தை வழி ஆணாதிக்கத்திற்கு இடமில்லை என வாதிடும் இஸ்லாமியப் பெண்ணியக்கம் ஒரு புறம் எனப் பல திசை விவாதங்கள் இடம் பெறுகின்றன. மூன்றாவது போக்கைப் பற்றி மட்டும் சற்றுச் சுருக்கமாகப் பார்ப்போம். தொழுகைத்தலத்தில பெண்களுக்கு இடமுண்டா, தற்காலிகத் திருமணம் (`முடா') அனுமதிக்கப்படுகிறதா, `முத்தலாக்' முதலானவை குறித்த விவாதங்களை சாத்தியமானால் இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்ப்போம்.

ஃபாதிமா மெர்னிசி (மொராக்கோ), ஆமினா வதாத் (ஆஃப்ரோ அமெரிக்கர்), அஸ்மா பர்லாஸ் (பாகிஸ்தான்) ஆகியோர் திருக்குர் ஆனை மறுவாசிப்பிற்குள்ளாக்கும் பெண்களில் முக்கியமானவர்கள். தன்னைப் `பெண்ணியவாதி' எனச் சொல்லிக் கொள்ள விரும்பவில்லை என்கிறார் அஸ்மா. இத்தகைய பெயர் சூட்டல் பல தவறான பொருட்களுக்கு இட்டுச் செல்லக் கூடும் என அவர் அஞ்சுவதை நாம் விளங்கிக் கொள்ளலாம். தன்னை இஸ்லாத்தை ஏற்கும் நம்பிக்கை வாதி, திருக்குர்ஆன் இறைவனால் அருளப்பட்டது என்கிற அதன் Ontological status ல் தனக்கு எந்த ஜயமும் இல்லை என்பதையும் அழுத்தமாக வலியுறுத்துகிறார் இந்த `ஹிஜாப்' அணியாத இஸ்லாமியச் சிந்தனையாளர். ``நான் இஸ்லாத்தையும், திருக்குர்ஆனையும் முழுமையாக நம்புகிறேன் (beleive). ஆனால் எல்லாம் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை வாதம் (Optimism) என்னிடமில்லை. ஏனெனில் இஸ்லாத்திற்குள் உள்ள பிற்போக்கு சக்திகள் பலமுள்ளவர்களாக உள்ளனர்'' என்கிறார் அஸ்மா.

திருக்குர் ஆன் குறித்த பன்முக வாசிப்புகளில், ஆதிக்கம் செலுத்தும் பெரும்பான்மை வாசிப்பு தவறான ஒன்று (misreading) என்பது அவர் கருத்து. நாம் முன்பு குறிப்பிட்ட வரலாற்று ரீதியான மாற்றங்களினூடாக, இஸ்லாம் விரிவாகி, இறுக்கமான அரசாக, தந்தை வழிச் சமூகமாக உருவானபோது பரிணமித்த வாசிப்பு இது. இவ்வாறு பொருள் கோட்டியலுக்கும் (heroneneutics) வரலாற்றுக்கும் இங்கே ஒரு முரண் உருவாகிவிடுகிறது. ஆதிக்கம் செலுத்தும் வாசிப்பு வரலாற்று ரீதியானதே, காலத்தை விஞ்சியதல்ல. தமது கருத்துக்களை வலியுறுத்த வேண்டி திருக்குர்ஆனைப் புரிந்து கொள்ள மத வரலாற்றையும், மரபுப் பதிவுகளையும் (ஹதீஸ்கள் உட்பட) இவர்கள் அதிகம் சார்ந்துள்ளனர். இத்தகைய வரலாற்று அடிப்படையிலான அறிவு மனிதத் தவறுகளுக்கு உட்பட்டது. மத ரீதியாகவும் சரி, முறையியல் அடிப்படையிலும் சரி திருக்குர்ஆனை இப்படி வாசித்தலை ஏற்க இயலாது என்பது அஸ்மாவின் வாதம்.

அப்படியானால் திருக்குர்ஆனை எப்படி வாசிப்பது? திருக்குர்ஆனை திருக்குர்ஆன் மூலமாகவே வாசிக்க வேண்டும். (holistic reading) வேறு துணை அதற்குத் தேவையில்லை. திருக்குர்ஆனை முழுமையாக வாசித்து அதன் பொதுக் கருத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். தனித்தனியாகப் பிரித்து வாசித்து, தமக்குத் தேவையான பொருளை எடுத்துக் கொள்வதை திருக்குர்ஆனே கண்டிக்கிறது. `வஹி' _ அதாவது இறைவாக்குகள் இறங்குதல் முற்றுப் பெறுமுன் அவசரமாகப் பொருள் கொள்ள வேண்டாம் என அது எச்சரிக்கிறது (20:114). பலவற்றை மறைத்து இவற்றை மட்டும் முன்னிறுத்தி வாசிப்பதை மறுக்கிறது (6:91). வேதத்தைப் பல கூறுகளாகப் பிரித்து தமது தேவையைப் பூர்த்தி செய்து கொள்வோரை ``நாம் நிச்சயமாக விசாரிப்போம்'' என எச்சரிக்கிறது (15: 90_93). எல்லாவற்றிற்கும் மேலாக இறைவாக்குகளை அவற்றின் சரியான இடத்திலும் காலத்திலும் வைத்துப் பொருள்கோட வேண்டும் (5:4) என திருக்குர் ஆன் எச்சரிப்பது குறிப்பிடத் தக்கது. பன்முக வாசிப்பிற்கு ஒரு எல்லையுண்டு, பிரதிக்கும் செயல்படுகிற தர்க்கத்தைப் புறக்கணித்து மிகை விளக்கம் அளிக்கக் கூடாது என உம்பர்டோ ஈகோ எச்சரிப்பது (Interpretation and Over interpretation பார்க்க : எஸ். சண்முகம் நூலுக்கு நான் எழுதியுள்ள முன்னுரை) இங்கே ஒப்பு நோக்கத் தக்கது.

திருக்குர்ஆனை இப்படி ஒட்டு மொத்தமாக வாசிக்கும்போதுதான் மேலைச் சூழலில் ஆதிக்கம் செலுத்திய பெண் வெறுப்பும் (mysogeny) ஆணாதிக்கப் பார்வையும் அதில் கிடையாது என்பது விளங்கும். பைபிளில் சொல்லப்படுவது போல இறைவன் திருக்குர்ஆனில் தந்தையாக உருவகிக்கப்படுவதில்லை. அப்படி சொல்வதை வெளிப்படையாக மறுக்கிறது. தந்தைமையையும் (Fatherhood) அது புனிதமாக்குவதை எதிர்க்கிறது. உடல் ரீதியான பாலியல் வேறுபாட்டின் (biological sex) அடிப்படையில் ஆண்களையும் பெண்களையும் எதிர் எதிராக நிறுத்துவதையும் அது ஏற்பதில்லை. பெண்களை வேறுபடுத்திப் பார்ப்பதே இல்லை எனச் சொல்ல வரவில்லை. உடல் ரீதியான வேறுபாட்டின் அடிப்படையில் (Sex) திருக்குர்ஆன் பெண்மைக்குரிய (gender) குறியீடுகள் எதையும் வகுப்பதில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் அது பாலியல் ரீதியாக வேறுபடுத்தினாலும்கூட இருபாலரையும் சமமற்றவர்களாகச் சொல்வதில்லை.

அப்படியானால் ஆண்கள் பல பெண்களை மணந்து கொள்ளலாம் எனவும் தேவையானால் கணவன் மனைவியை அடிக்கலாம் எனவும் திருக்குர்ஆன் அனுமதிப்பதை எவ்வாறு பொருள் கொள்வது? இந்தக் குறிப்பான வசனங்களுடன்தான் `போராடி' உருவாக்கிய பொருளை அஸ்மா கூறுகிறார். மனைவியை அடிப்பது என்பதற்கு திருக்குர்ஆன் பயன்படுத்தும் சொல்: `தராபா'. இதற்கு `அடிப்பது' என்பது தவிர `பிரிப்பது' என்பது உட்படப் பல பொருள்கள் உண்டு. தம்பதிகளுக்கிடையே அன்பை, பொறுமையை, கருணையை சகிப்புத்தன்மையைத் தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டே உள்ள திருக்குர்ஆனின் பொதுப் போக்கிற்கு ஏற்ப பொருள் கோடாமல் `அடிப்பது' என்கிற சொல்லைத் தேர்வு செய்தது எங்ஙனம்? இதுகாறும் திருக்குர்ஆனை வாசித்தவர்கள் எல்லாம் ஆண்களாக இருந்ததுதானே இதற்குக் காரணம்?

`நுஷூஸ்' என்கிற சொல்லுக்குக் `கணவனுக்கு மனைவி பணியாமை' என இதுகாறுமான வாசிப்பில் பொருள் கொண்டாடப்படுகிறது. ஆனால் அதே சொல் `மனைவிக்குக் கணவன் பணியாதிருத்தலையும்' குறிப்பிடுவதை அஸ்மா சுட்டிக் காட்டுகிறார். போரில் அனாதையாக்கப்பட்ட பெண்களுக்காகவே திருக்குர்ஆன் பல தார மணத்தை வற்புறுத்துகிறது.

இப்படி நிறையச் சொல்லலாம். அப்படியானால் திருக்குர்ஆனை ஒரு பெண்ணியப் பிரதி எனச் சொல்லலாமா? இது இன்னும் பெரிய அபத்தம். பெண்ணியம், ஜனநாயகம், மதச்சார்பின்மை என்பவையெல்லாம் ரொம்பவும் நவீனமான கருத்தாக்கங்கள். ஆயிரத்து நானூறு ஆண்டுகட்கு முற்பட்ட பிரதிகளில் இவற்றைத் தேடுவது அபத்தம். பேரரசர் அக்பரை மதச்சார்பற்ற (Secular) சிந்தனையாளர் என்கிற ரீதியில் அமார்த்திய சென் வரையறுத்தது விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டது. இங்கே குறிப்பிடத்தக்கது. அக்பரின் மதப் பொறுமையை, மாற்று மதங்களை அனுசரிக்கும் தன்மையை வியப்பது வேறு, Secularism என்கிற நவீன கருத்தாக்கத்தை அவர் மீது சுமத்துவது என்பது வேறு.

இஸ்லாத்தில் ஆணாதிக்கக் கருத்தர்கள் இல்லை என்பதல்ல. ஆனால் அது வரலாற்று ரீதியில் உருவாக்கப்பட்டதே. அத்தகைய கருத்துக்கள் என்றென்றைக்கு மானவையல்ல. ஒரு மாற்று வாசிப்பு இஸ்லாத் திற்குள்ளேயே, திருக்குர்ஆனிலேயே சாத்தியம் என்பதுதான் அஸ்மா பர்லாஸ் போன்றோரின் வாதம். `இஸ்லாம் பெண்களுக்கு எதிரானது' என்பதாகச் சொல்லி வெளியே நின்று விமர்சிக்கும் நிலைப்பாட்டை எடுத்தால் பின் உரையாடலுக்கே சாத்தியமில்லாமல் போய் விடும். மதத்திற்குள் நின்று உரையாடுவதற்குரிய ஒரு Textual Strategy யை அஸ்மா போன்றோர் உருவாக்குவது ஒரு மிக முக்கியமான போக்கு.

அத்வானி : ஜின்னா : நேரு




இந்தியாவின் இரண்டாவது "இரும்பு மனிதர்" என்று ஒரு காலத்தில் பாரதீய ஜனதா கட்சியினரால் அழைக்கப்பட்ட அத்வானி இன்று மிகக் "குழப்பமான மனிதர்" ஆகியிருக்கிறார். கட்டுக்கோப்பான கட்சி என்றும், நேர்மையான கட்சி என்றும் "சில அரசியல் விமர்சகர்களால்" சர்டிபிகேட் கொடுக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சி இன்று கோஷ்டி பூசல்கள், லஞ்ச விவகாரங்கள், தலைவர்களின் தலைமை ஆசை என திண்டாடிக் கொண்டிருக்கிறது. கட்சியின் ஒரு தலைவர் மீது மற்றொரு தலைவர் பாலியல் காசெட்டுகளை வெளியிட்டு காலை வாரி விட முயலுவது என "அதி நாகரிகமான" கட்சியாக பாஜக மாறி விட்டது.

கடந்த காலங்களில் "நாக்பூரில்" இருந்து திரைமறைவில் இயக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சி இன்று வெளிப்படையாக நாக்பூரில் இருந்து ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படுகிறது. ஒரு காலத்தில் இந்தியாவின் பிரதமராகக் கூடியவர் என்று வருணிக்கப்பட்ட அத்வானி போன்ற "பவர்புல்" தலைவர்களே இன்று நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் தலைமையால் அரசியலில் இருந்து தூரத்தப்படும் நிலையில் இருக்கிறார்கள்.


கட்சியில் சரிந்து போய் விட்ட தன் செல்வாக்கினை சரி செய்ய அத்வானி மற்றொரு ரதயாத்திரை தொடங்கி விட்டார். அவருடைய முதல் ரதயாத்திரை அனைவராலும் ஆதரிக்கப்பட்டது. பாரதீய ஜனதா கட்சி முதல் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பிற சங்பரிவார் குழுக்கள் வரை அனைவரும் அத்வானியை தங்கள் கொள்கைகளை காப்பாற்ற வந்த "பிதாமகனாக" நினைத்தனர். அந்த ரதயாத்திரை தான் பாபர் மசூதியையும் இடிக்க வைத்தது. பாரதீய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கும் முக்கிய காரணமாகியது.

ஆனால் இம் முறை அத்வானி மேற்கொள்ளும் ரதயாத்திரைக்கு அவரது சொந்த கட்சியினரிடம் கூட ஆதரவு இல்லை. அவராக வலியச் சென்று ஆர்.எஸ்.எஸ் தலைமையிடம் ஆதரவு கேட்ட பொழுதும் அவர்களின் ஆதரவு அவருக்கு கிடைக்கவில்லை. சிறுபான்மையினருக்கு காங்கிரஸ் "சலுகை" கொடுக்கிறது, "அமெரிக்காவிடம் இந்தியா தன்னுடைய பாதுகாப்பை அடகு வைத்து விட்டது" போன்ற உப்புசப்பில்லாத விவகாரங்களை ரதயாத்திரைக்கான காரணங்கள் என அத்வானி கூறிக்கொண்டிருப்பது அவருடைய பரிதாபமான நிலையையே காட்டுகிறது. கிரிக்கெட் ஆட்டக்காரர் இர்பான் பத்தான் முஸ்லிம், ஆனாலும் இந்தியாவிற்கு பெருமை சேர்க்கிறார் என்று ரதயாத்திரையில் உளறிக்கொண்டிருக்கிறார். இர்பான் பத்தானை யாரும் இங்கு முஸ்லிம் என்று பார்ப்பதில்லை. அவரை இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக, ஒரு இந்தியராகத் தான் பார்க்கிறார்கள். அவரை முஸ்லிம் என்று அழைத்து, அவரை ஒரு உதாரணமாக காட்டி பிற முஸ்லிம்கள் அப்படி இல்லை என்று கூறும் முயற்சியாகவே இது தெரிகிறது. ஆனால் அதற்கெல்லாம் இப்பொழுது பலன் இருக்க போவதில்லை.

ஒரு காலத்தில் வாஜ்பாய் வெறும் "மாஸ்க்" தான், ஆட்சியின் ரிமோட் அத்வானி கையில் என்று அனைவரும் கூறிக் கொண்டிருக்க, அத்வானியே நாக்பூரில் இருந்து ரிமோட் மூலம் இயக்கப்படும் வெறும் மொம்மை தான் என்று அதன் பிறகு நடந்த நிகழ்வுகள் தெளிவு படுத்தின. அத்வானி கட்சியின் தலைமையையும், கட்சி மீதான தனது கட்டுப்பாட்டையும் இழந்து விட்டார். அடுத்து பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தால் கூட நரேந்திர மோடி பிரதமராகக் கூடிய அளவிற்கு கூட அத்வானிக்கு வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை.

அத்வானியின் இந்த நிலைக்கு அவர் ஜின்னாவை குறித்து பாக்கிஸ்தானில் பேசியது தான் காரணம் என்று கூறப்படுகிறது. எந்த அத்வானி தங்களின் "கொள்கையை" கட்டிக் காப்பாற்றுவார் என ஆர்.எஸ்.எஸ் நினைத்ததோ, அதே அத்வானி ஜின்னாவை பாக்கிஸ்தானில் சென்று பாராட்டியது ஆர்.எஸ்.எஸ் க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் "பாக்கிஸ்தான்" என்ற தேசத்தையே ஆர்.எஸ்.எஸ் ஏற்றுக் கொள்ள வில்லை. அவ்வாறு இருக்கும் பொழுது பாக்கிஸ்தான் உருவாக காரணமாக இருந்த ஜின்னாவை தங்களின் "கதாநாயகன் அத்வானி" புகழ்ந்துரைத்ததை எப்படி பொறுத்துக் கொள்ள முடியும் ? இத்தனைக்கும் வெளிப்படையாக அத்வானி ஜின்னா குறித்து எந்த கருத்தையும் கூறவில்லை. ஜின்னாவின் ஒரு உரையை மட்டுமே மேற்கோள் காட்டினார். ஆனால் அதைக் கூட சங்பரிவார் அமைப்புகளால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

அத்வானி முதலில் தான் பெரிதாக வளர்த்த பாரதீய ஜனதா இயக்கம் தன்னை கைவிடாது என்று நினைத்தார். தன்னுடைய ராஜினாமா அறிவிப்பு போன்ற அதிரடி நடவடிக்கை மூலம் பிரச்சனையை சரியாக்கி விடலாம் என்றும் ஆர்.எஸ்.எஸ் பிடியில் இருந்து பாரதீய ஜனதா கட்சியை விடுவித்து விடலாம் என்றும் நினைத்தார். ஆனால் பாஜகவில் இருந்த அடுத்தக் கட்ட தலைவர்கள் அத்வானியை அகற்ற இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டனர். ஆர்.எஸ்.எஸ் கொள்கையை கட்டிக் காப்பதாக தங்களை முன்நிறுத்திக் கொண்டனர். இதனால் அத்வானி விலகும் சூழலும், அடுத்த தலைவராக ஆர்.எஸ்.எஸ் முடிவெடுப்பவரே தலைமையேற்க முடியும் என்ற நிலையும் ஏற்பட்டு விட்டது.

நாக்பூர் தலைமையை தங்கள் பக்கம் ஈர்க்க பல தலைவர்கள் முயற்சி எடுக்க, எங்கே நாக்பூர் தலைமை "குஜராத் தாதா" நரேந்திர மோடியை பாஜக தலைவராக்கி விடுமோ என்று அனைவரும் அஞ்சி இருக்க, ஏதோ இந்தியாவின் மிஞ்சி இருக்கிற மரியாதை பிழைத்து போகட்டும் என்று நினைத்து ராஜ்நாத் சிங்கை பாரதீய ஜனதா கட்சி தலைவராக்கி, அத்வானியை வீட்டிற்கு அனுப்பும் முதல் கட்ட நடவடிக்கையை ஆர்.எஸ்.எஸ் எடுத்தது. இன்று அத்வானி மறுபடியும் ஒரு ரதயாத்திரை தொடங்கி விட்டார். இதன் மூலம் தன்னுடைய செல்வாக்கினை நிலைநிறுத்த முனைகிறார். ராஜ்நாத் சிங்கும் மற்றொரு புறம் இருந்து ரதயாத்திரை தொடங்குகிறார். அத்வானியின் ரதயாத்திரையை வாஜ்பாய் விமர்சித்தார் என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பாஜகவில் அத்வானியின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது இனி வரும் நாட்களில் தான் தெரியவரும். ஆனால் அவருக்கு நேரம் சரியில்லை என்பது அவரது ரதயாத்திரை மற்றொரு முறை நிருபித்து இருக்கிறது.

ஒரு மத அடிப்படைவாதியாக தன்னை காட்டிக் கொண்ட அத்வானி, ஏன் ஜின்னாவை புகழ்துரைக்கும் தவறைச் செய்தார் ? இந்திய அரசியலில் "Pseduo secularist" என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தி அதற்கு காங்கிரசை உதாரணமாக கொடுத்த அத்வானி தன்னுடைய இயக்கத்தின் ஜென்ம விரோதியான ஜின்னாவை எப்படி Secularist என்று வர்ணிக்க துடித்தார் ?

அத்வானி என்ன தான் பாஜகவின் அசைக்க முடியாத தலைவராக இருந்தாலும், ஒரு மத அடிப்படைவாதி, ரதயாத்திரை மூலம் பாபர் மசூதியை இடித்தவர் என்ற வகையில் தான் பிரபலமானார். தன்னுடைய இந்த இமேஜ் கூட்டணி ஆட்சியில் பிரதமராக தனக்குபலவீனத்தை ஏற்படுத்தும் என்று அத்வானி நினைத்தார். அது போல ஆர்.எஸ்.எஸ் பிடியில் இருந்து கட்சியை விடுவிப்பதிலும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கடும் மத அடிப்படைவாதத்தில் இருந்து கட்சியை விலக்க வேண்டுமெனவும் நினைத்தே "ஜின்னா Securalist" என்ற அஸ்திரத்தை பிரயோகித்துப் பார்த்தார். இதன் மூலம் வாஜ்பாய் போன்று தானும் ஒரு மிதவாதி என்று காட்டிக் கொள்வதும், தன்னுடைய அடிப்படைவாதி இமேஜை அகற்றிக் கொள்வதும் அவரது நோக்கமாக இருந்தது. ஆர்.எஸ்.எஸ் கொள்கையில் இருந்து பாஜகவை விலக்கிக் கொள்வதும் அவரது நோக்கமாக இருந்தது.

ஆனால் இதனை பாரதீய ஜனதா கட்சியின் அடுத்த கட்ட தலைவர்கள் தலைமை பதவிக்கு குறிவைத்த நிலையிலும், பாஜக எதிர்கட்சியாக இருந்த நிலையிலும் கூறியது தான் அவரது நிலையை மோசமாக்கி விட்டது. அத்வானியின் இந்த நோக்கமும், பாரதீய ஜனதா கட்சியை ஒரு மத அடிப்படைவாத இயக்கத்தின் பிடியில் இருந்து விலக்குவதும் மிகச் சரியான நடவடிக்கையாகவே எனக்கு தெரிகிறது. ஆனால் மதவாதியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்ட பிறகு அதனை அவரால் விலக்க முடியவில்லை. மறுபடியும் சிறுபான்மையினருக்கு எதிரான அஸ்திரத்தை எடுத்து பழைய நிலைக்கு மறுபடியும் நுழைய முனைகிறார்.

ஜின்னா மதரீதியாக இந்தியாவை பிளந்து பாக்கிஸ்தானை உருவாக்கினார். எனவே அவர் மதவாதி என்பது இந்தியாவின் வாதம். சங்பரிவார் என்றில்லாமல், காங்கிரசும் இவ்வாறு தான் ஜின்னாவை அழைத்து வந்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஜின்னாவை மதவாதி என்ற முத்திரை குத்தியதே காங்கிரஸ் கட்சி தான். உண்மையில் ஜின்னா காங்கிரஸ் மற்றும் சங்பரிவார் இயக்கங்கள் கூறுவது போல மதவாதி தானா ?

நிச்சயமாக இல்லை என்று சொல்ல முடியும். அதே நேரத்தில் மதத்தை தன்னுடைய ஆதாயத்திற்காக பயன்படுத்திக் கொண்டவர் என்ற குற்றச்சாட்டிலும் உண்மை இருக்கத் தான் செய்கிறது.

ஜின்னாவை குறித்த அத்வானியின் கருத்துக்கள் தவறானவை அல்ல. ஜின்னா இன்றைய பாக்கிஸ்தானுக்கும், இந்தியாவிற்கும் தேவைப்படும் மதச்சார்பின்மை குறித்த பல விஷயங்களை 1947லேயே கூறினார். ஆனால் துரதிருஷ்டவசமாக, இரண்டு நாடுகளுமே இன்று மதரீதியாகவே பிளவுபட்டு நிற்கிறது. ஜின்னா பாக்கிஸ்தான் கிடைத்த சில வருடங்களில் இறந்து விட்டார். அவருடன் அவர் பாக்கிஸ்தானை உருவாக்கிய நோக்கங்களும் மறைந்து போய் விட்டன. அதன் பிறகு பாக்கிஸ்தானில் உருவாகிய தலைவர்கள் பாக்கிஸ்தானை படிப்படியாக மதரீதியான தேசமாக மாற்றி விட்டனர்.

ஜின்னா பாக்கிஸ்தான் குறித்து 1947ல் பின் வருமாறு கூறினார். இந்த நோக்கங்கள் இன்றைக்கு பாக்கிஸ்தானுக்கும் சரி, இந்தியாவிற்கும் சரி மிகுந்த தேவைக்குரியதாக இருக்கிறது.

'Now, if we want to make this great State of Pakistan happy and prosperous we should wholly and solely concentrate on the wellbeing of the people, and specially of the masses and the poor. If you will work in cooperation, forgetting the past, burying the hatchet, you are bound to succeed. If you change your past and work in a spirit that every one of you, no matter to what community he belongs, no matter what relations he had with you in the past, no matter what is his colour, caste or creed, is first, second and last a citizen of this state with equal rights, privileges and obligations, there will be no end to the progress you will make.

'I cannot overemphasise it too much. We shall begin to work in that spirit and in course of time all these angularities of the majority and minority communities, the Hindu community and Muslim community,… will vanish. Indeed, if you ask me, this has been the biggest hindrance in the way of India to attain its freedom and independence and but for this we would have been free people long ago.

Therefore, we must learn a lesson from this. You are free, you are free to go to your temples. You are free to go to your mosques or to any other places of worship in this State of Pakistan. You may belong to any religion or caste or creed; that has nothing to do with the business of the State.…You will find that in course of time Hindus will cease to be Hindus and Muslims would cease to be Muslims, not in the religious sense, because that is the personal faith of each individual, but in the political sense as citizens of the State.'

Jinna's Address to the Constituent Assembly of Pakistan, Karachi
August 11, 1947

ஜின்னாவின் இந்த பேச்சினை பிறகு வந்த பாக்கிஸ்தான் ஆட்சியாளர்கள் பல காலக்கட்டங்களில் அவரின் உரையிலிருந்தே நீக்கி விட்டனர். குறிப்பாக ஹியா-உல்-ஹக் என்ற பிரபலமான இராணுவ ஆட்சியாளர், இந்தப் பேச்சினை "ஜின்னாவின் தொகுக்கப்பட்ட உரைகளில்" இருந்து நீக்கினார். ஜின்னாவின் இந்தப் பேச்சு பாக்கிஸ்தான் ஒரு இஸ்லாமிய நாடு தான் என்ற நிலையை மாற்றி விடுவதாக இருக்கும் என்று அவர் நினைத்தார்.

ஜின்னா தனிப்பட்ட வாழ்க்கையில் தன்னை ஒரு முஸ்லிம் என்று என்றைக்கும் முன்னிறுத்த வில்லை. வசதியான குடும்பம், மேற்கத்திய நாகரிகம், மேற்கத்திய வாழ்க்கை முறை போன்றவை மூலம் அவர் ஒரு ஆங்கிலேயர் போலத் தான் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஜின்னா மத நம்பிக்கை கொண்டவரும் அல்ல. உதாரணமாக கூற வேண்டுமானால் பன்றிக் கறி உண்பது போன்ற இஸ்லாமுக்கு உவ்வாத காரியம் என்று கூறப்படுவதை கூட அவர் செய்து வந்திருக்கிறார். இதனை ஏன் சொல்கிறேன் என்றால் அவர் தன்னை முஸ்லிம் என்று நிலைநிறுத்த என்றைக்கும் முனைந்ததில்லை.

ஆனால் காங்கிரசில் இருக்கும் தலைவர்களுக்கு எதிரான தன்னுடைய ஈகோவை தீர்த்துக் கொள்ள முஸ்லிம் என்ற அடையாளத்தை எடுத்துக் கொண்டார் என்று சொல்லப்படும் வாதங்களில் உண்மை இருக்கவேச் செய்கிறது.

ஜின்னா முஸ்லிம்களுக்கு அதிக முக்கியத்துவத்தை கோரினார். முஸ்லிம்களுக்கு தனி பிரதிநிதித்துவம், முஸ்லீம்களுக்கு ஆட்சியில் மூன்றில் ஒரு பங்கு அதிகாரம் போன்றவையை அவர் முன்னிறுத்தினார். ஒன்றுபட்ட இந்தியாவுடன், முஸ்லிம்களுக்கு அதிக அதிகாரம் என்பதாகத் தான் அவரது கோரிக்கை ஆரம்பத்தில் இருந்து வந்தது. ஆனால் அதனை நேரு உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. காங்கிரஸ் இந்தியாவின் அனைத்து பிரிவினரையும் பிரதிநிதித்துவம் செய்வதாகவும், முஸ்லீம் லீக்கை காங்கிரசுடன் இணைத்து விட வேண்டும் என்றும் அவர்கள் எண்ணினர். 1937ல் நடந்த தேர்தல் கூட காங்கிரசின் இந்த வாதத்தை வலுப்படுத்தவே செய்தது. முஸ்லீம் லீக் மூஸ்லிம்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளில் அதிக இடங்களை பிடிக்க முடியவில்லை. ஆனாலும் பிற இடங்களில் ஓரளவுக்கு கணிசமான வெற்றியை மூஸ்லீம் லீக் பெற்றது என்று சொல்லலாம்.

சாதி இந்துக்கள் அதிகம் இருக்கும் காங்கிரசில், முஸ்லீம்களுக்கு சம உரிமை கிடைக்காது என்று ஜின்னா நினைத்தார். 1940 முதல் "இரு தேசம்" என்ற கொள்கையை ஜின்னா எடுக்கத் தொடங்கினார். பிரிட்டிஷாரும் இதனை ஊக்குவித்தனர். வின்ஸ்டன் சர்ச்சிலுடன் ஜின்னாவுக்கு இருந்த நெருங்கிய நட்பு அவரது கோரிக்கைக்கு வலுசேர்த்தது.

ஆனால் பாக்கிஸ்தானை ரத்த வெள்ளத்திற்கு இடையே தான் ஜின்னாவால் அமைக்க முடிந்தது. 1946ல் பாக்கிஸ்தான் கோரிக்கையை வலியுறுத்தி "Direct Action Day" என்று ஜின்னா அறிவித்தது கல்கத்தாவில் பெரும் கலவரமாக உருவெடுத்தது. இந்து முஸ்லீம் கலவரமாக மாறி அந்த நாளில் பல ஆயிரக்கணக்கான இந்துக்களும், முஸ்லீம்களும் பலியானார்கள். 10,000 பேர் பலியாகி இருக்கலாம் என்று அரசின் புள்ளி விபரங்கள் கூறுகிறது. ("ஹே ராம்" திரைப்படத்தில் கூட கமல் இதனை தன்னுடைய கதையில் கொண்டு வந்திருப்பார்) இந்துக்களுடன் சேர்ந்து இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் ஆரம்பத்தில் இருந்த ஜின்னா பின் இந்துக்களுடன் ஒரே இந்தியாவில் இருக்க முடியாது என்ற முடிவிற்கு வர காங்கிரஸ் தலைவர்களுடன் மூஸ்லிம்களுக்கு பிரநிதித்துவம் போன்றவற்றில் அவருக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் தான் முக்கிய காரணமாக தெரிகிறது.

அதே சமயத்தில் பாக்கிஸ்தான் என்ற தேசம் 1947ல் உருவாகாமல் இருந்திருந்தால் அதன் பிறகு அப்படி ஒரு தேசம் நிச்சயமாக உருவாகி இருக்காது என்றும் கூறிவிட முடியாது. பாக்கிஸ்தானில் ஜின்னாவிற்கு பின் தோன்றிய முஸ்லீம் வெறியர்களும், இந்தியாவில் ஆதிக்கம் செலுத்த தொடங்கிய சங்பரிவார் குழுக்களும் நிச்சயம் பல தேசங்களை உருவாக்கியிருக்க கூடும். பாக்கிஸ்தான் பின் இரண்டாக உடைந்து பங்களாதேஷ் உருவாகியதும் கவனிக்கத்தக்கது. 1947ல் ஏற்பட்ட பிரிவினையால் மூன்று தேசங்கள் மட்டுமே உருவாகியது.

இந்தியா இன்னும் "ஒரு" தேசமாக இருக்கிறது என்றால், அதற்கு காரணம் நேரு தான் என்பது என்னுடைய எண்ணம். சர்தார் வல்லபாய் பட்டேல் போன்றவர்கள் இந்தியாவின் பிரதமராகக் கூடிய நிலை ஏற்பட்டிருந்தால் இந்தியாவை பாக்கிஸ்தான் போன்ற ஒரு முழுமையான மதம் சார்ந்த நாடாக மாற்றி இருப்பார்கள். நேரு இந்தியாவை அவ்வாறு மாற்ற விடாமல் தடுத்தார் என்றே நான் நினைக்கிறேன். நேருவின் பொருளாதாரம், வெளியுறவு, காஷ்மீர் உள்ளிட்ட பிற கொள்கைகளை ஏற்றுக் கொள்ள முடியாவிட்டாலும், இன்றைய ஒரு சராசரி இந்தியனை நேரு "அன்றைக்கே" வெளிப்படுத்தியதாகவே நான் நினைக்கிறேன் (இதற்கான காரணங்களை நேரு குறித்து பதிவுகள் எழுதும் பொழுது முன்வைக்க முடியும் என்று நினைக்கிறேன்)

தீண்டப்படாத மக்கள் கும்பல் கும்பலாய் முஸ்லிம்களாக மாறியாக வேண்டும்!

சகோதரர்களே! 69 - ஆதி திராவிடர்கள் முகமதியர்களாகிவிட்டதால், அவர்களுடைய பாவங்களெல்லாம் மன்னிக்கப்பட்டு விட்டதென்றோ, அவர்களுக்கு "மோட்சலோகம்" கூப்பிடும் தூரத்திற்கு வந்துவிட்டதென்றோ, "கடவுளோடு கலந்து விட்டார்கள்" என்றோ கருதி நான் மகிழ்ச்சி அடையவில்லை. இவைகளை நான் ஏற்றுக் கொள்ளுவதும் இல்லை. மற்றவர்களை நம்பும்படிச் சொல்வதும் இல்லை. அன்றியும், ஒரு மனிதன் மதம் மாறுவதால் அவனுடைய செய்கைக்கும், எண்ணத்திற்கும் தகுந்த பலன் அடைவதில் வித்தியாசமுண்டு என்பதை நான் ஒப்புக் கொள்வதில்லை.

இந்துவாயிருந்து பசுவைக் கொன்றால் பாவம் என்றும், முமகமதியனாயிருந்து பசுவைக் கொன்று தின்றால் பாவமில்லை என்றும், மதத்தின் காரணமாக கருதுவது மூடநம்பிக்கையே ஒழிய, இரண்டுவித அபிப்பிராயத்திலும் அர்த்தமே இல்லை. உலகத்தில் உள்ள சகல மதங்களும் மூட நம்பிக்கையின் மீதே கட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால், பாவ புண்ணியத்தையும், மோட்ச நரகத்தையும், ஆதாரமாய் வைத்தும் நான் மகிழ்ச்சியடையவில்லை. மற்றென்னவென்று கேட்பீர்களேயானால், இந்து மதம் என்பதிலிருந்து மதம் மாறினதாகச் சொல்லப்படும் 69 -ஆதிதிராவிடர்களும், பிறவியின் காரணமாக அவர்களுக்குள்ள இழிவிலிருந்து விடுதலை அடைந்ததோடு, பாமரத் தன்மையும் காட்டுமிராண்டித்தனமுமான மிருகப்பிராயத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும், சிறிது விடுதலை அடைந்தவர்களானார்கள் என்பதற்காகவே மகிழ்ச்சியடைகின்றேன்.

அதாவது, மேற்கண்ட 69 - பேர்களுக்கும் தீண்டாமை என்பது போய்விட்டது. இனி ஒருவன் அவர்களைப் பறையன், சக்கிலி, சண்டாளன் என்று இழிவாய்க் கூற முடியாது. அவர்களும் மற்றவர்களை "சாமி, சாமி, புத்தி" என்று கூப்பிட்டுக் கொண்டு தூர எட்டி நிற்க வேண்டியதில்லை. மற்ற மனிதர்களின் காலில் விழுந்து கும்பிட வேண்டியதில்லை. ஊரை விட்டு வெளியில் குடி இருக்க வேண்டியதில்லை. குளிக்கத் தண்ணீரில்லாமல், குடிக்கத் தண்ணீரில்லாமல் திண்டாட வேண்டியதில்லை.

வண்ணான், நாவிதன் இல்லாமல் அழுக்குத் துணியுடனும், கரடிபோல் மயிர் வளர்த்துக் கொண்டும், பார்ப்பவர்களுக்கு அசிங்கமாகத் தோன்றும்படி வாழவேண்டியதில்லை. இனி எந்த பொதுத் தெருவிலும் நடக்கலாம்; எந்த வேலைக்கும் போகலாம்; யாருடனும் போட்டி போடலாம்; அரசியலில் சமபங்கு பெறலாம்; மத சம்பந்தமாகவும் இனி அவர்கள் தங்கள் கோயிலுக்குள் போக தாராள உரிமை உண்டு; வேதம் படிக்க உரிமையுண்டு.

எனவே, இவர்கள் பொருளாதாரக் கஷ்டத்திலும், அறிவு வளர்ச்சித் தடையிலும், சமூக இழிவிலும், சுயமரியாதைக் குறைவிலும், அரசியல் பங்குக் குறைவிலுமிருந்து ஒருவாறு விடுதலை அடைந்து விட்டார்கள் என்பது போன்றவைகளை நினைக்கும் போது மகிழ்ச்சியடையாமலிருக்க முடியவில்லை. ஏனெனில், தீண்டாமை, நெருங்காமை, பார்க்காமை, பேசாமை முதலாகிய சகிக்க முடியாத கொடுமைகள் முதலாவதாக மதத்தின் பேரால், வேத சாஸ்திரங்களின் பேரால், கடவுள்களின் பேரால் உள்ளவைகள் எல்லாம் அடியோடு நீங்க வேண்டும் என்கின்ற தீவிர ஆசையே இம்மாதிரி நினைக்கச் செய்கின்றது.

ஆகையால், தீண்டாமை முதலிய கொடுமை ஒழிய வேண்டும் என்கின்ற கருத்துள்ளவர்களுக்கும், ஒற்றுமையை எதிர்பார்க்கும் கருத்துள்ளவர்களுக்கும், மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை ஊட்ட வேண்டும் என்னும் கருத்துள்ளவர்களுக்கும் நமது நாட்டில் இப்போது உள்ள முக்கிய வேலை, முதலில் தீண்டப்படாதவர்கள் முகமதியராவதை ஆட்சேபியாதிருப்பதேயாகும் என்பது, எனது தாழ்மையானதும், கண்ணியமானதுமான அபிப்பிராயம்.

நிற்க, சிலர் முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குகின்றது என்று எனக்கு எழுதி இருக்கிறார்கள். அது வாஸ்தவமானால், தீண்டப்படாதவர்களுக்கு அவர்களது தீண்டாமை ஒழிய முகமதிய மதத்தைச் சிபாரிசு செய்வதற்கு அதுவே ஒரு நல்ல காரணம் என்றே கருதுகிறேன். முகமதிய மதம் முரட்டு சுபாவத்தை உண்டாக்குவது உண்மையானால், அதில் சேர்ந்த இவர்கள் இனிமேலாவது இவ்வளவு தாழ்மையாக நடந்து கொள்ள மாட்டார்கள் அல்லவா? மற்றவர்களும் அவர்களது முரட்டு சுபாவத்தைக் கண்டு பயந்து மரியாதையாய் நடந்து கொள்ள இடமேற்படும்அல்லவா? ஆகையால், இந்து சமூகத்தில் உண்மையான சமத்துவமும், ஒற்றுமையும் ஏற்படும் வரை தீண்டப்படாதவர்கள் கும்பல் கும்பலாய் முகமதியர் ஆவதைத் தவிர வேறு மார்க்கமில்லையாதலால், நாம்அதை ஆட்சேபிக்க முடியாதவர்களாய் இருக்கின்றோம்.

தவிரவும், மதத்தினிடத்திலோ இந்து சமூகத்தினிடத்திலோ கவலையுள்ளவர்களுக்கு இதனால் ஏதாவது சங்கடம் இருப்பதாயிருந்தால், அவர்கள் தாராளமாய் வெளிக்கிளம்பி வந்து தீண்டப்படாத மக்களுக்கு இருக்கும் கொடுமையையும் இழிவையும் நீக்க முன்வரட்டும். அவர்களோடும் எப்போதும் ஒத்துழைக்கத் தயாராயிருக்கிறேன்.

தந்தை பெரியார்.

Wednesday, July 2, 2008

மன்னர் ஃபஹதின் எளிமையான நல்லடக்கத்தினால் இஸ்லாத்தை ஏற்ற பாதிரியார்!

சவுதி அரேபியாவின் மன்னராக இருந்த ஃபஹத் பின் அப்துல் அஜீஸ் 2005-ல் மரணமடைந்தார். அவரை தலைநகர் ரியாத்தில் உள்ள பொது மையவாடியில் மிக மிக எளிமையான முறையில் அரச குடும்பத்தினர் அடக்கம் செய்தனர். இந்த அரிய நிகழ்ச்சி இத்தாலியில் உள்ள பிரபல கிறிஸ்துவ பாதிரியார் ஒருவரை மனமாற்றம் அடையச் செய்தது. அதைத் தொடர்ந்து அவர் தனது வாழ்வியல் நெறியாக இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டார் என்ற தகவலை ஆக 21, 2005 அன்று வெளிவந்த அரப் நியூஸ் ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.

தொலைக்காட்சியில் மன்னர் ஃபஹதின் நல்லடக்கக் காட்சிகளை கண்ட பாதிரியாரை எந்தவித படாடோபமோ, ஆடம்பரமோ இல்லாமல் மிகவும் சாதாரணமாக இருபது வருடங்கள் வளமிக்க ஒரு சாம்ராஜ்யத்தை ஆண்ட மன்னரை அடக்கம் செய்யப்பட்ட நிகழ்ச்சி மிகவும் கவர்ந்தது.
ரியாத் மாநகரில் உள்ள அல்-அவ்த் என்ற மையவாடியில் மன்னர் ஃபஹத் இறந்த மறுநாள் உலக தலைவர்கள் கலந்துக் கொண்ட அவரது நல்லடக்க நிகழ்ச்சி உலகமே பார்த்து வியக்கும் வண்ணம் மிக எளிமையான முறையில் நடந்தேறியது.

இஸ்லாமிய அழைப்பாளர் டாக்டர் அப்துல்லாஹ் அல்-மாலிக் இது பற்றிக் கூறுகையில் 'எளிமையான முறையில் செய்யப்பட்ட மன்னர் ஃபஹதின் நல்லடக்கம், இந்த பாதிரியாரின் மனதில் வியக்கத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தி அவரை இஸ்லாத்தின் பக்கம் ஈர்த்து விட்டது. அவர் ஏற்கனவே பல இஸ்லாமிய நூல்களை படித்திருந்த போதிலும் அவை இந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்தவில்லை' என்று குறிப்பிட்டார்.

மிக பிரபலமான இத்தாலிய பிரஜை ஒருவர் இஸ்லாத்தை தழுவுவது இது இரண்டாவது முறையாகும். நான்கு வருடங்களுக்கு முன்னர் சவுதி அரேபியாவிற்கான இத்தாலிய தூதுவராக ரியாதில் பணியாற்றிய டார்குவாடோ கார்டில்லி என்பவர் இஸ்லாமிய மார்க்த்தை ஏற்றுக் கொண்டார்.
டாக்டர் மாலிக் மேலும் குறிப்பிடுகையில் 'பாதிரியார் தொலைக்காட்சியில் மன்னரின் இறுதிக் காட்சிகளை பார்த்துக் கொண்டிருந்தபோது, மன்னருடன், வேறு ஒரு சாதாரண மனிதரின் உடலும் அங்கு கொண்டு வரப்பட்டு இருவருக்கும் ஒரே தொழுகை நடத்தப்பட்டு இருவரையும் எந்த வித்தியாசமும் பாராட்டாமல் ஒரே மாதிரியான மண்ணறைகளில் அடக்கம் செய்யப்பட்ட காட்சிகளைக் கண்டார். சமத்துவத்திற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்த இந்த இரண்டு மாறுபட்ட முஸ்லிம்களின் இறுதி அடக்க நிகழ்ச்சிகள் பாதிரியாரின் சிந்தனையைத் தூண்டி அவரை இஸ்லாத்தை ஏற்கும்படி செய்து விட்டன' என்று கூறினார்.

'நான் ஏற்கனவே கடந்த பல வருடங்களாக பல இஸ்லாமிய நூல்களை படித்துள்ளேன். பல ஒலிநாடாக்களை கேட்டுள்ளேன். அவைகள் என்னில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அரச குடும்பத்தின் இந்த எளிய நல்லடக்கம் என்னை அதிர வைத்து என் மனதை மாற்றி விட்டது.' என்று பாதிரியார் குறிப்பிட்டதாக மாலிக் தெரிவித்தார்.

மேலும் அவர், மன்னரின் இந்த அரிய நிகழ்ச்சி இன்னும் நிறைய மனிதர்களை உளரீதியாக பெரும் மாற்றம் கொள்ள வைத்திருக்கும் என்று தான் நம்புவதாகவும், முஸ்லிம் செய்தி ஊடகங்கள் இஸ்லாத்தின் சகிப்புத்தன்மை மற்றும் சகோதரத்துவம் போன்றவற்றை எடுத்தியம்பக் கூடிய இதுபோன்ற நிகழ்வுகளை மக்களுக்கு எடுத்துக்காட்டினால் இஸ்லாமிய மார்க்கத்தை அவர்கள் நேசிக்கத் துவங்குவார்கள் என்று ஆலோசனை வழங்கினார்.

62 வயதை அடைந்துவிட்ட இந்த முன்னாள் பாதிரியார் 'எனது மீதமுள்ள வாழ்நாட்களை இந்த அற்புத மார்க்கத்திற்காக பிரச்சாரம் செய்வதிலேயே கழிக்கப் போகிறேன்' என்றும் தெரிவித்தார்.
ஜித்தாவில் உள்ள இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் இயக்குனர் பதர் அல்-ஒலயான் கூறுகையில் பாதிரியாரின் இந்த மனமாற்றம் மிக நல்லச் செய்தியாகும் என்று தெரிவித்தார். அதோடு இன்னொரு சம்பவத்தை பற்றிக் கூறும்போது தனது நிறுவன அலுவலகத்திற்கு இஸ்லாத்தில் இணைவதற்காக வந்த ஓர் இத்தாலியர் மக்காவில் லட்சக்கணக்கான மக்கள் ஒவ்வொரு தொழுகைக்கும் கூடி அணிவகுத்து நின்று தொழுதுவிட்டு அமைதியாக கலைந்துச் செல்வது தன்னை பெரிதும் கவர்ந்த அம்சம் என்று கூறியதாக தெரிவித்தார்.

'ஒரே ஒரு அழைப்பொலி (அதான்) எழுப்புவதின் மூலம் மிகப்பெரும் எண்ணிக்கையிலான மக்களை ஒன்று கூட்டுவது எப்படி உங்களுக்கு சாத்தியப்படுகிறது? நிச்சயம் இது படைத்த இறைவனது செயலே அன்றி வேறில்லை!' என்று அந்த இத்தாலியர் ஆச்சர்யப்பட்டதாகவும் கூறினார். மேலும், முஸ்லிம்கள் ஒவ்வொருவரும் இஸ்லாமிய மார்க்கத்தின் நற்செய்திகளை பிற மக்களிடம் தொடர்ந்து எடுத்துச் செல்ல வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

தனது 60வது வயதில் நவம்பர் 15, 2001 அன்று இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட இத்தாலிய தூதர் கார்டில்லி அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது 'இறைவனின் இறுதி வேதமான திருக்குர்ஆனை தொடர்ந்து படித்ததின் காரணமாக இஸ்லாம்தான் சத்திய மார்க்கம் என்பதை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டேன்' என்று தெரிவித்திருந்தார்.

நன்றி: அப்துல்அலீம் சித்தீக் - மக்கள் உரிமை வார இதழ்

Tuesday, July 1, 2008

இஸ்லாமிய கடவுள் கொள்கை

பிஸ்மில்லா ஹிர்ரஹ்மா னிர்ரஹிம்
1
அண்டசராசரங்கள் முழுவதும் தானாக தோன்றின அதுமட்டுமல்லாமல் தானாக தான் இயங்கி வருகின்றன என்றால் அதை ‘நமக்கு மேலே ஒரு சக்தி உள்ளது’ என்று நம்பி கூறிய மாபெரும் மேதையும் நாத்திகருமான ஐன்ஸ்ட்டீன் போன்றவர்களால் கூட ஏற்க முடிவதில்லை. காரணம், தானாக தோன்றியிருந்தால் இப்பொழுது இருக்கும் ஒரு அழகு இருந்திருக்காது, தானாக இயங்கி வந்தால் இப்படி ஒரு ஒழுங்கு இருக்காது என்பது தான்.வரையறைக்குள் சுற்றும் பூமி, தூணில்லாத வானம், பறக்கும் போது விழுந்து விடாத பறவை, நிறத்தில் ஒரே மாதிரி இருந்தாலும் வடிவத்தில் வித்தியாசம் காட்டும் இலைகள் இப்படியாக நான் குறிப்பிட்ட அந்த அழகின், அந்த ஒழுங்கின் அடையாளங்களாக சொல்லிக் கொண்டே போகலாம்.ஏன் மனிதன் தன்னை பற்றி ஒரு கணம் சிந்தித்தால் கூட அவனை விட ஒரு சிறந்த அடையாளம் இறைவனுக்கு ஆதாரம் வேறு எதுவுமே தேவையில்லை..இதை வலியுறுத்தி தான் பெருமானார் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூட, ‘தன்னை அறிந்தவன் தன் நாயனை அறிந்தவன் போலாவான்’ என்று கூறினார்கள்.

அனைத்தும் ஒரு கட்டுபாட்டுக்குள் தான் இருக்கிறது என்றால் அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ‘அது(?)’ நிச்சயமாக நினைத்து கூட பார்க்க முடியாத மாபெரும் சக்தியாக தான் இருக்க வேண்டும்.அந்த சக்தியை தான் நாம் இறைவன் என்று பொதுவாக சொல்கிறோம் அல்லது நம்புகிறோம்- சரி, அந்த இறைவன் யார்? எப்படியிருப்பான்? எங்கே இருக்கிறான்?ஆணா? பெண்ணா? அல்லது இரண்டும் இல்லாத வேறொன்றா?எதன் அடிப்படையில் இறைவனை நம்புவது?அந்த இறைவனை மனிதர்களாகிய நாம் அறிந்து வைத்திருக்க தான் வேண்டுமா? அல்லது வணங்கித் தான் ஆக வேண்டுமா?இறைவனுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பு தான் என்ன? மனிதனால் இறைவனை நெருங்க முடியுமா?இப்படியாக இறைவனை பற்றிய வினாக்கள் இதயத்தை உலுக்கிக் கொண்டிருக்கிறது..இறைவனை பற்றி பேச, சிந்திக்க துணிந்து விட்டதால் மதங்களை பற்றி பேசி தான் ஆக வேண்டும்.

ஏனெனில் மதங்கள் தானே இறைவன் இருப்பதாக நம்ப சொல்கிறது அல்லது இறைவனை சென்றடையும் வழிகளை காட்டி தருகிறது.எல்லா மதங்களும் பொதுவாக ‘தீமையை தவிர்’ என்றும் ‘நன்மையை செய்’ என்றும் தான் சொல்கின்றன-மது, சூது, கொலை, களவு, காமம், பொய், பித்தலாட்டம் என எல்லாவற்றையும் ‘பாவம்’ என்று ஒதுக்குவதில் எல்லா மதமும் ஒத்து போகின்றன-நேர்மை, நாணயம், உண்மை, சத்தியம், தர்மம் இவையெல்லாம் ‘புண்ணியம்’ என்று சேர்த்துக் கொள்வதில் கூட எல்லா மதமும் ஒத்து போக தான் செய்கின்றன-ஆனால் ‘இறைவன்’ என்று வந்து விட்டால் மனிதர்களாகிய நாம் ஆளுக்கு ஒரு பக்கமாக பிரிந்து போய் மதங்கள் எனும் நம்பிக்கையின் அடிப்படையில் ஏற்பட்டிருக்கும் இறைவன் பெயரை வைத்துக் கொண்டு சண்டை போட ஆரம்பித்து விடுகிறோம்.வீட்டிற்கு ஒரு மரம் என்பது போல மதங்களுக்கு ஒரு இறைவன் என்றிருக்க நிச்சயமாக வாய்ப்பில்லை. நிச்சயமாக இறைவன் என்றால் அது ஒரே ஒரு பரம்பொருளை தான் குறிக்கும்.உண்மை இப்படியிருக்க, மதங்களுக்கு இடையில் கடவுள் கொள்கையில் மட்டும் ஏனிந்த முரண்பாடு?இதில், இஸ்லாம் எவ்வாறு மற்ற மதங்களுக்கு இடையில் இருந்து மாறுபடுகிறது?

2

ஆனால் அதற்கு முன்னால் இஸ்லாம் எப்போது தோன்றியது? தோற்றுவித்தது யார்? இவை பற்றியெல்லாம் மக்களுக்கு ஏற்கனவே இருக்கும் தவறான கருத்தை கலைந்தாக வேண்டும்-பொதுவாக மக்கள் என்ன நினைக்கிறார்கள்?இஸ்லாம் என்பது 1400 ஆண்டுகளுக்கு முன்னால் முஹம்மது நபி(ஸல்) அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட மார்க்கம்-இஸ்லாமிய மதத்தின் ஸ்தாபகர் முஹம்மது என்பவர் ஆகும்.-‘இஸ்லாமியர்கள்’ யாவரும் முஹம்மதியர்கள் என்று பெரும்பாலோர் கருதி வருகிறார்கள்-ஆனால் உண்மை என்னவெனில்,இஸ்லாம் என்பது மிகமிகப் பழமையான மார்க்கம்- உலகின் முதல் மனிதர்- ஆதம்(அலை) அவர்கள் தோன்றிய போதே தோன்றிய மார்க்கம் தான் இஸ்லாமிய மார்க்கம்.இறைவன் உலக மக்களுக்கு (முஸ்லீம்களுக்கு மட்டும் அல்ல) வழங்கிய வேதமான திருக்குரானில் மக்களிடம் பேசும் போது, ‘ஆதமுடைய மக்களே..’ என்று அழைத்து தான் பேசுகிறான்.மேலும் திருக்குரானில் அந்னிஸாஉ(பெண்கள்) எனும் அத்தியாயத்தின் முதல் வசனமே, ‘மனிதர்களே! அவன் (இறைவன்) உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்தே உற்பத்தி செய்தான்’ என்று வருகிறது.ஆகவே ஆதம்(அலை) அவர்கள் முதலே இஸ்லாமிய மார்க்கம் தோன்றி இன்றளவும் முக்கிய கொள்கையாம் இறைவன் ஒருவன் என்பதை விட்டு கொடுக்காமல், மாறாமல், மறுக்காமல் இருந்து வருகிறது.

நாம் தொடர்ந்து படிக்கும் முன்பு மேற்சொன்ன உண்மையை தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.இனி தொடர்வோம்-‘நல்ல வார்த்தை கூட இப்ப கெட்ட வார்த்தை ஆனது’ இது நம்மவர் எனும் படத்தில் வரும் பாடலின் ஒரு வரி-இன்றைக்கு நம்மிடையே பல வார்த்தைகள் அர்த்தம் மாறி அதன் தன்மையை இழந்து விட்டதை கண் கூடாக காண்கிறோம்- காது கூடாக கேட்கிறோம்.உதாரணமாக, ‘மாமா’ என்ற உன்னத உறவை குறிக்கும் மேன்மைக்குறிய வார்த்தையை எவ்வளவு கீழான நிலைக்கு நாம் பேசி பேசியே தள்ளி விட்டிருக்கிறோம் எனபது தெளிவு.அது போல் இறைவன் என்ற வார்த்தையும் அல்லது அதை ஒத்த வார்த்தைகளையும் நாம் பேசி பேசியே அதன் அர்த்தத்தை கீழ் நிலைக்கு தள்ளியிருக்கிறோம்.

நண்பர்கள் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்ளும் போது ‘தெய்வமே’ என்று அழைப்பதை சொல்லலாம்.சிலர் ஏதாவது நன்மை செய்து விட்டால் ‘உனக்கு கோயில் கட்டி தான் கும்பிடனும்’ என்று கூட சொல்வார்கள்.ஒரு சமுதாயத்திற்காக உயிர், வாழ்க்கை எல்லாம் தியாகம் செய்து ஒருவர் உழைக்கிறார் என்று வையுங்கள்- அவரை ‘குலதெய்வ’மாக்கி வணங்க தொடங்கி விடுவார்கள்-‘கடவுள்’, ‘தெய்வம்’, ‘இறைவன்’ என்ற பெயர்களின் உண்மையான தன்மை தான் என்ன?அந்த தன்மைகள் பற்றி எழுதி விட முடியுமா? காகிதத்தில் அடங்கி விடுமா? நினைத்து பார்த்தால் என் கை மட்டுமல்ல என் எழுதுகோலின் மையும் அல்லவா நடுங்குகிறது..

இறைவனை பற்றி இறைவனை தவிர வேறு யாரால் தான் சரியாக கூறி விட முடியும்..இதோ அவனே கூறுகிறான்.. தனது திருமறையில்..மேலும், நிச்சயமாக பூமியில் உள்ள மரங்கள்(யாவும்) எழுதுகோல்களாகவும், கடல்(நீர்யாவும் மையாக இருந்து) அ(து தீர்ந்த) பின்னர் ஏழு கடல்கள் அதனுடன் (மையாக) சேர்ந்து கொண்டாலும் அல்லாஹ்வின்(இறைவனின்) வாக்குகள் (எழுதித்) தீராது; நிச்சயமாக அல்லாஹ் (யாவற்றையும்) மிகைத்தவன்; தீர்க்கமான அறிவுடையவன். (குரான் அத்தியாயம் லுக்மான்(31): வசனம் 27) ஆக இறைவனை பற்றி எழுதவே முடியாது என்று இருக்கும் போது அவனை ஒரு உருவத்துக்குள் எப்படி அடக்கி வைக்க முடியும்..?

3

ஆமாம்.. அதாவது கடவுளுக்கு சிலை, படம் என உருவம் அமைத்துக் கொள்வதை இஸ்லாம் எதிர்க்கிறது- எதிர்க்கிறது என்றால் மிகமிக கடுமையாக எதிர்ப்பு- இஸ்லாத்தின் முக்கிய பெருநாள் ஹஜ் பெருநாளாகும். இப்ராஹீம் நபி(அலை) அவர்கள் தான் தள்ளாத வயதில் ஈன்றெடுத்த அருமை மகன் இஸ்மாயில் நபி(அலை) அவர்களை அல்லாஹ்வுக்காக அவனது கட்டளைக்கு பணிந்து அறுத்து பலி கொடுக்க முனைந்தார்கள். அப்பொழுது இஸ்மாயில் நபி(அலை) அவர்களூம் அதற்கு மனமுவந்து இணங்கினர். ஆனால் இப்ராஹீம் நபி(அலை) அவர்கள் எவ்வளவோ முறை முயன்றும் இஸ்மாயில் நபி(அலை) அவர்களின் கழுத்து அறுபடவே இல்லை. ஜிப்ரயீல்(அலை) அவர்கள் ஒரு ஆட்டுடன் வந்தார்கள். இறுதியாக இப்ராஹீம் நபி (அலை) அவர்கள் அந்த ஆட்டை அறுத்து பலியிட்டார்கள்.நரபலி கூடாதென்றும், இப்ராஹீம்(அலை) அவர்களின் தியாகமும் ஒன்று சேர உணர்த்தப்பட்ட சிறப்பான நிகழ்ச்சியை நினைவு கூர்வதே ஹஜ் பெருநாளாகும்.

இந்த தியாகத்தை நினைவுறுத்தி தான் உலக முஸ்லீம்கள் ஹஜ் பெருநாளன்று ஒவ்வொரு கிரியைகளும் செய்கிறார்கள். இப்ராஹீம் நபி அவர்களின் குடும்பம் என்னென்ன செய்ததோ அதை ஹாஜிகள் அதே இடத்திற்கு ஹஜ் பெருநாளன்று சென்று அதே கிரியைகளை செய்கிறார்கள்.அவ்வளவு உயர்ந்த அந்தஸ்து வழங்கப்பட்ட இப்ராஹீம் நபி அவர்களின் சிலை, இஸ்மாயில் நபியவர்களின் சிலை ஆகியவற்றை புனித மக்கா நகரில் க•பா என்ற தேவாலயத்தில் வைத்து இறைவன் என்று கருதி வணங்கி வந்தார்கள்.பெருமானார்(ஸல்) அவர்கள் மக்கா வெற்றிக்கு பிறகு இது போல் க•பா சுவர்களில் பல காலமாக வீற்றிருந்த 360 சிலைகளையும் தன் கைத்தடியால் அடித்து உடைத்தார்கள்.அப்படி உடைக்கும் போது அவர்கள் கூறியது என்ன தெரியுமா?‘சத்தியம் வந்துவிட்டது; அசத்தியம் அழிந்து விட்டது, நிச்சயமாக அசத்தியம் அழியக் கூடியது தான்’ என்ற திருமறை குரான் ஷரீப் வசனத்தை தான் உச்சரித்தார்கள்.

ஆக யாருடைய படமும் சரி உருவமும் சரி கடவுள் என்று கருதப்படக் கூடாது என்ற கொள்கையை வெறும் சொல்வது மட்டுமின்றி வென்றும் காட்டியிருக்கும் மகத்தான மார்க்கம் தான் இஸ்லாம்.இப்பொழுது உதாரணமாக உங்களது கடவுச்சீட்டில்(passport) உங்கள் படம் உள்ளது அல்லவா? அதை ஒருவர் திருடி உங்களது போட்டோவை எடுத்து விட்டு திருடியவர் அவரது போட்டோவை ஒட்டி அவர் தான் நீங்கள் என்று பயணம் போகிறார் என்று வையுங்கள்.. அது குற்றமா? இல்லையா? நிச்சயமாக சட்டவிரோதம் தான்.. அதில் சந்தேகமே வேண்டாம்.. இல்லையா..?

ஆனால் அதே குற்றத்தை கடவுளுக்கு செய்கிறார்கள், அதாவது.. ஒரு ஆணுடைய உருவத்தை வரைந்து(இன உறுப்புகள் எல்லாம் சேர்த்து தான்) இது தான் கடவுள் என்று காட்டுகிறார்கள்.. இதில் பெண் கடவுள் படஙகள் வேறு..? அவர்கள் உருவத்தையும் வரைந்து கடவுள் என்று கூறுகிறார்கள்..?எப்படி முடிகிறது? எப்படி கடவுள் பெயரில் இப்படி ஒரு அபாண்டத்தை செய்ய துணிந்து விட்டார்கள்..?கடவுள் நீங்கள் வரையும் உருவமாக அவர் இல்லாத போது கடவுளால் எப்படி குற்றம் கண்டுபிடிக்காமல் இருக்க முடியும்? கடவுச்சீட்டில் நம் புகைப்படம் மாறும் போது நாம் குற்றம் காணுகிற போது..இதனை தான் பழந்தமிழர்கள் கூட ‘கண்டவர் விண்டதில்லை விண்டவர் கண்டதில்லை’ என்று கூறினார்கள்.இறைவன் தெளிவாக திருகுரானில் அன் ஆம் எனும் அத்தியாயத்தில் 100வது வசனத்தில் ‘.... இன்னும் அவர்கள் எவ்வித அறிவுமின்றி ஆண்மக்களையும் பெண்மக்களையும் அவனுக்கு(இறைவனுக்கு) கற்பனை செய்து விட்டார்கள்; அவர்கள் வர்ணிப்பவைகளை விட்டும் அவன் தூய்மையானவனாக பரிசுத்தமானவனுமாய் இருக்கிறான்’ என்று இறைவனே உண்மையை வெளிச்சப் படுத்துகிறான்.

மக்கா வாசிகள் வெளியூருக்கு பயணம் சென்றால் நான்கு கற்களை சுமந்து செல்வார்கள். மூன்று கற்களை உணவு தயாரிக்க வேண்டி அடுப்பாக பயன்படுத்திக் கொள்வார்கள். நான்காவது கல் எதற்கு தெரியுமா? கடவுளாக வழிபட..நம் நாட்டில் கூட கடவுள் சரித்திரங்கள் பற்றி பேசும் போது ‘வரன் கொடுத்த கடவுள் தலையிலேயே கை வைத்த பத்மாசுரன்’ பற்றி பேசுவார்கள். இஸ்லாமை பொறுத்த வரை இதற்கு எல்லாம் சாத்தியமே இல்லை.கடவுளுக்கு குடும்பம் இருக்கிறது, கடவுளுக்கு சந்ததிகள் உள்ளன, கடவுள்களுக்குள் போர் எல்லாம் நடந்திருக்கிறது என்று கூறும் போது அந்த கடவுள் தன்மை எவ்வாறு அங்கே சிதைக்கப் படுகிறது என்று சிறிது யோசிக்க வேண்டும்.

4

கவிக்கோ அப்துல் ரஹ்மான் ஒரு புதுக்கவிதை எழுதினார்,கடவுளுக்கு நிறைய பெயர் உண்டுநாத்திகன் வைத்த பெயர்இல்லை-உண்மை தான்.. கடவுள் எப்படி இருப்பான் என்று நாம் கற்பனை செய்கிறோமோ அப்படி அவன் இல்லை என்பதை தான் இஸ்லாம் உணர்த்துகிறது.ஆக, உருவம் இல்லாத எவரையும் மனிதன் என்று குறிப்பிட முடியாது. உருவம் உள்ள எதையும் இறைவன் என்று குறிப்பிட முடியாது.சரி, கற்பனைக்கு அப்பாற்பட்ட கடவுளை மனிதன் ஏன் அறிய வேண்டும்? அல்லது வணங்க வேண்டும்? அல்லது நெருங்க வேண்டும்?கடவுளை பரிபூரணமாக அறிந்து கொள்ள முடியாது. அதனால் தான் அகிலத்தின் அருட்கொடை முஹம்மது நபி(ஸல்) அவர்களே கூட , ‘இறைவனே.. உன்னை நான் எவ்வாறு அறிந்து கொள்ள வேண்டுமோ அவ்வாறு அறிந்து கொள்ள வில்லை’ என்று கூறினார்கள்.

இந்த பிரார்த்தனை பெருமானார் அவர்களின் இறைவனை பற்றிய தேடலையும் இறைவனின் விசாலத்தையும் குறிக்கிறது.ஆனால் கையிலிருக்கும் மெழுகு திரியில் எறியும் நெருப்பை ஆராய்ந்து சூரியனின் வெப்பத்தை அறிய முற்படும் முயற்சியாக தான் இறைவனின் ஆற்றலை அறிய முற்படுவதை கருத வேண்டும்.நமக்குள் மெழுகு திரி இருக்கிறது.. அதாவது நமக்குள் இறைவன் இருக்கிறான். நாம் சிறியதாக கருதி செய்யும் பல்வேறு தவறுகளால் இறைவனை விட்டு நாம் தூர சென்று விடுகிறோம், அதாவது குரான் குறிப்பிடுவது போல், ‘நமக்கு நாமே தீங்கிழைத்துக் கொள்கிறோம்’.

5

நம் வீட்டிற்கு நமக்கு பிடித்த விருந்தாளி ஒருவர் வருகிறார் என்று வையுங்கள் அவருக்காக நம் வீட்டில் ஒரு அறையை ஒதுக்கி சுத்தம் செய்து அலங்கரித்து வைத்து இருப்போம் அல்லவா..அது போல் தான் இந்த பூமியையும் இன்னும் யாவற்றையும் அதாவது ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு அவனால் ஏற்படுத்த முடியாத ஆனால் அவனுக்கு அவசியம் தேவையான அனைத்தையும் முதலில் படைத்தான்.அதன் பிறகு அவன் மனிதர்களை படைத்தான். இதை இறைவன் தனது திருமறையில் உலகத்தின் தலைமையை இறைவனின் பிரதிநிதியாக (கலீபாவாக) இருந்து-ஏற்பதற்காகவே மனிதன் படைக்கப்பட்டதாக (குரான் ஷரீ•ப் அல்பகறா:30) கூறுகிறான்.இறைவனின் பிரதிநிதியாக இருந்து உலகை ஆள வேண்டிய மனிதன் அவனுக்காக படைக்கப்பட்டதையே இறைவனாக்கி அதற்கு அடிமையுமாகி இருப்பது தான் இன்றைய வேதனை நிலை.

நம்மை உயர்ந்த நோக்கத்திற்காக படைத்திருப்பதாக எடுத்து கூறும் இறைவன் நமக்கு அருகிலேயே இருப்பதாகவும் நம்பிக்கை தருகிறான்.‘பிடரியிலுள்ள உயிர் நரம்பை விட நாம் அவனுக்கு(மனிதனுக்கு) மிக சமீபமாகவே இருக்கிறோம்’ என்று குரான் ஷரீ•ப் அத்தியாயம் கா•ப் வசனம் 16ல் தெளிவு படுத்துகிறான்.இறைவன் எவ்வாறெல்லாம் இருப்பான் என்று நாம் கற்பனை செய்து வைத்து இருக்கிறோமோ அவ்வாறு இருப்பதிலிருந்தும் அவன் தூய்மையானவன், அவன் பரிசுத்தமானவன்..இறைவன் மனிதர்களாகிய நம்மை அவனது பிரதிநிதியாக இருந்து அகில உலகத்தையும் ஆளக் கூடியவனாக இறைவனுக்கே சான்றாக இருக்குமாறு படைத்துள்ளான்..இறைவன் நமக்கு எதுவெல்லாம் அல்லது யாரெல்லாம் நெருக்கமாக இருக்கிறது என்று நினைக்கிறோமோ அதையெல்லாம் விட மிக மிக நெருக்கமாக சிறு சிறு அசைவுகளை கூட கூர்ந்து கவனித்தவாறு உள்ளான்..

மேற்கூறிய மூன்று கருத்துக்களையும் உணர்ந்து விளங்கி வைத்திருக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்.இதை உணர்ந்து விட்டால் உள்ளத்தில் ஒலி ஏற்றப்பட்டு விட்டால் வானங்கள் எனும் திரை விலகி இறைவன் எனும் மாபெரும் பேருண்மையை உணரக் கூடிய பாக்கியங்கள் பெற்று வாழ்வாங்கு வாழலாம் என்பது இஸ்லாம் கூறும் வாழ்க்கை நெறியாகும்.இறைஞானி ஹஜ்ரத் எஸ்.அப்துல் வஹ்ஹாப் பாகவி அவர்கள் சொல்வார்கள், ‘தனக்கென உள்ள நன்மைகளை மற்றவர்களுக்கு சிரமம் இல்லாமல் அடைய வேண்டும்’ என்று.


Written by: Nagore ismail