Sunday, November 30, 2008

கவிக்கோவை (அப்துல் ரஹ்மானை) க் கண்டேன்!



அறிஞரைக் கண்டேன்
அகமகிழ்ந்து நின்றேன்!
கவிக்கோவைக் கண்டேன்
பெருமகிழ்வு கொண்டேன்!

அன்பைத் தந்தேன் - அவர்
அறிவைத் தந்தார்...
நட்பைத் தந்தார்...
நெஞ்சில் நிலைத்து நின்றார்!

இந்த
கவிக்கோவிடம் பாடம் கற்க
கவிஞர்களின் தொடர் வரிசை
தினம் தினம்...
தொடர்ந்து கொண்டிருக்கிறது!

அரசியல் களத்தில்
அவரில்லை என்றாலும்
அரசியல் சக்தி
அவரையும் சுற்றி இருக்கிறது!

ஏழு அதிசயங்களைப் பற்றி
கேள்விப் பட்டுள்ளேன்!
எட்டாவது அதிசயத்தை - அவரது
ஆறாவது விரலில் பார்த்தேன்!!!

- சென்னை, 21 - 09 - 2000

Tuesday, November 25, 2008

பனுவலியல் அராஜகத்திற்கு எதிராக சாருநிவேதிதாவின் புதிய நாவல்



Pathivu Toolbar ©2008thamizmanam.com


பனுவலியல் அராஜகத்திற்கு எதிராக சாருநிவேதிதாவின் புதிய நாவல் - பகுதி-3
சாருநிவேதிதாவின் முதல் நாவலான 'எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸிபனியனும்' நாவலுக்கு 1990- பறை இதழில் எழுதிய விமர்சனம் இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது.

3. பனுவலில் எதிர்கொள்ளப்படும் பாலியல் அரசியல் (*)
நாவலின் பகுதி இரண்டில் நாவலை எழுதும் சூர்யாவின் எரிக்கப்பட்ட பகுதிகள் என கிளிங்கோவிட்ஸால் நினைவு கூறப்படும் பகுதிகள் (பக். 100-148) சூர்யா என்ற நவீன எக்ஸிஸ்டென்ஷியலிச மற்றும் அறிவார்ந்த சிந்தனையாளனின் பால்ய கால இருட் பகுதிகள் (regime of silence) வெளிக்கொண்டுவரப்படுகின்றன. அவைகளை பட்டியலிடுவோம்.
1. ஓரினப் பணர்ச்சி - தனபால்-சூர்யாவுக்கு இடையில் நடைபெறுவது. 2. சுயமைதூனம் 3. வாய்வழிப் பாலுறவு - செட்டடியாரிடம் 15 வயது பெண், சூர்யாவிடம் புசாரி.4. உடலுறவு - நிறைய முறையற்ற, “தேவடியாள்களு”டன், உறவினர்களிடையோன 5. தூக்கத்தில் ஸ்கலிதமாதல் 6. யோனியில் முத்தமிடல் 7. துர்க்கையின் தலையில் மூத்திரம் பேய்தல்.

இவ்வுறவுகள் எல்லாம் சூர்யா என்ற அறிவுஜீவியின் நினைவிலி மனப்புலத்தை கடடமைக்கிறது. இளம் சூர்யாவின் உலகம் வர்க்கம்சாரா ஓரப்பிரிவினரின் வாழ்க்கையும், இருத்தலுமே ஆகும். நாவலின் முதல்மற்றும் இரண்டாம் பகுதி இத்தகைய “லும்பன்” பகுதியினரின் தோற்றம், வளர்ச்சி, இருத்தல் பற்றியே பேசப்படுகிறது.
சூர்யாவின் அப்பா கிருஷ்ணசாமி என்கிற தெலுங்கு பேசும் நாயுடுவின் எட்டு சகோதர, சகோதரிகளும் (கடைசிச் சகோதரியைத் தவிர) வீட்டை விட்டு சூர்யாவின் தாத்தாவால் விரட்டப்படுகிறார்கள். சமூகத்தின் பொருளியல் கொடூரங்களை எதிர்கொள்ள முடியாமல் சிதைவுற்ற வாழ்க்கைமுறையை ஏற்று வாழ்ந்துவிட்டு போகிறார்கள்.
சூர்யாவின் அம்மா பார்வதியின் 9 சகோதர, சகோதரிகளும். அதே பொருளியல் கொடூரங்களுடன் போராடி, குடும்பம் சிதைந்து “லும்பன்” வாழ்க்கையை நோக்கி நகர்த்தப்படுகிறார்கள்.

அடியாட்கள், குற்றவாளிகள், பாலியல் வேட்கையாளர்கள், பாலியல் பிறழ்ந்தவர்கள், போதை மருந்து கடத்தல், உட்கொள்ளல்... ஆகியவர்களாக சிதைக்கப்படுகிறார்கள். இவர்களும் சேர்ந்துதான் அக்காலத்தைய சமூக வரலாற்றை எழுதுகிறார்கள்.
இச்சிதைவுககு நாம் அனைவருமே காரணம்தான். இது ஏதோ சமூக அவலம் என்று புறக்கணிக்கக் கூடியதல்ல. ஏனென்றால், இச் சிதைவுகளினால் சமூக அமைப்பு உடைந்து விடாமல் சமநிலையை காப்பவர்கள் நாம் எல்லோரும்தான். இத்தகையவர்களை அவலத்திற்குரியவர்களாகவும், குற்றவாளிகளாகவும் இடம்மாற்றம் செய்வதன் மூலம் சீரழிவிற்கான குற்ற உணர்விலிருந்து விடுபட்டுவிடுகிறோம் நாம் (**). இதன் பின் புலத்தில்தான் பாலியிலின் அரசியல் செயல்படுகிறது.
என்பதை அறிந்துகொள்ள வேண்டும், பாலியல் என்பதும் அரசமைப்பின் அதிகாரத்தினைக்கொண்ட கட்டமைக்கப்பட்ட ஒரு கருவி என்பதை உணரவேண்டும். பாலியலுக்கும், மதத்திற்கும் உள்ள எதிர்மறை உறவை உடைத்து வாசிபப்தன் மூலம் இதை புரிந்து கொள்ளலாம்.
மதமும், பாலியலும் இரட்டைமுரண் எதிர் அமைப்புகளைக்கொண்ட அதிகாரம் செலுத்தும் கருவிகளாக செயலபடுகின்றன.
அதிகாரத்துடன் மதம் நேர்மறையான உறவையும், பாலியல் எதிர்மறையான உறவையும் கொண்டிருக்கின்றன. மதம் நேரடியான அறமதிப்பீடுகளைக் கொண்டு, பாவத்தை அறிக்கையிடல், கடவுளிடம் பாவமன்னிப்புக்கோரல், பரிகாரம் செய்வதன்மூலம் கடவுளை சாந்தப்படுத்துதல்... போன்றவற்றின் மூலம் மனிதனின் குற்றம் சார்ந்த நேரடியான அதிகாரத்தை நிலைநிறுத்துகிறது.
பாலியல் எதிர்மறையான அறமதிப்பீடுகளைக் கொண்டியங்குவதால் மனிதனின் குற்றம் சார்ந்த உணர்வுகளை ஒடுக்கி பதுக்குவதன் மூலம் அதிகாரத்தை நிலைநிறுத்துகிறது. மதம் பாலியலுக்கு எதிராக கட்டப்பட்டு நிலைநிறுத்தப்படுவதால் ஆதிக்கத்தின் மையக் கண்ணியாக பல நூற்றாண்டுகள் இருந்து வந்துள்ளது.
மதத்தின் ஆதிக்கத்தை எதிர்க்ககும் மனிதன் பாலியல் பிறழ்ச்சிகள் மூலம் அதை சாதிக்க முனைகிறான்.
நாவலில் சூர்யா சுயமைதூனம் செய்யத் தேர்ந்த இடங்கள் இருண்ட பிள்ளையார் கோவில், பேய்கள் நடமாடுவதாக நம்பப்படும் சுடுகாடு, புனிதமானதாகக் கருதப்படும் துளசிங்கப்பெருமாள்கோவில்... இவை மதம், மரணம் மற்றும் புனிதம் பற்றிய கருத்துத் திணிவுகளுக்கு எதிரானது என்பதைக் காட்டுகிறது.
‘அச்சம்‘ மற்றும் ‘குற்றம்‘ பற்றிய உணர்வுகள் மனித மனத்திற்கள் கட்டப்பட்ட ஆதிநிலை உணர்வுகள் என்பதும், அது சமூகத்தின் மையத்தில் செயல்படும் குற்ற உணர்வு, அச்சம் அகியவற்றின் வெளிப்படலே என்பதையும் சுட்டகிறது.
சூர்யாவின தங்கை ஆர்த்தி பேய் பிடித்து, மந்திரிக்கப்பட்டுள்ள நிலையில் தூய்மை காக்கவேண்டும் எனக் கூறப்பட்டபோது.. சூர்யாவுக்கு இரவு ஸ்கலிதமாகிறது.
ஒன்றைச் செய்யக்கூடாது என எதிர்மறை ஒடுக்குதல்கள் அதை செய்யும் தூண்டதலை நினைவிலி மனப்புலத்தில் ஏற்படுத்தி அதற்கு எதிராக இயங்க வைத்துவிடுகிறது.

பேய்களுக்குப் பயப்படும் சூர்யா துர்க்கையின் தலையில் மூத்திரம் பேய்கிறான். துர்க்ககைக்கும், பேய்களுக்கும் இடையிலான நுட்பமான வித்தியாசம் முக்கியமானது. பேயின் ஒரு தெய்வீக வடிவமாகவே துர்க்கை புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.
பேய் அமானுஷ்யத் தன்மைகொண்டதாகவும், துர்க்கை தெய்வத் தன்மைக் கொண்டதாகவும் ஒரு முரண்நிலை நிலவுகிறது. பேயும், தெய்வமும் ஒரு நாணயத்தின் இரண்ட பக்கங்கள், ஆனால் ஒரே நாணயத்தில்தான் இருக்கின்றன. இப்படி ஒரு சமநிலை மதத்தால் காக்கப்படுவதனால்.. பேய்க்குப் பயம் உள்ளவன், துர்க்கையிடம் பயம் இல்லாதவனாக இருக்கிறான்.
ஏதோ ஒருவகையில் மதத்தின் அதிகாரத்திற்குள் பயம் சார்ந்த உணர்வகள் மூலம் மனிதர்கள இருத்தி வைக்க முடிகிறது.
பூசாரி என்ற புனித பிம்பம் (பார்ப்பான்) சூர்யாவிடம் தொண்டையில் முடிவளர்வதாகக் கூறி வாய்வழிப் பாலுறவு கொள்கிறான். வயதான செட்டியார் சூர்யாவின் பாலியல் ஆலோசகராய் உள்ளார்.
தாய் உறவுடையவர், மகன் உறவுடையவரிடமும், தந்தை உறவுடையவர் மகள் உறவுடையவரிடமும்.. முறையற்ற உடலுறவுகள் நிறைய பேசப்படுகின்றன.
இவை எல்லாம் சேர்ந்து கட்டமைக்கப்பட்டவன்தான் இன்றைய அறிவுஜீவி சூர்யா. இப்படிப் பதுக்கப்பட்ட மௌனங்களை உடைத்து பேச வைப்பதன் மூலம், மனிதன் பாலியல் ஒடுக்குதல்களிலிருந்து விடுபட்டு விடுதலைக்குரிய போராளியாகிறான்.
ஆதிக்கத்தின் சகல துறைகளையும் எதிர்த்து கலகம் செய்பவனாக கட்டமைக்கப்படுவான். பாலியல் வேட்கை, பிறழ்ச்சி பற்றிய உண்மையான அறிக்கையிடல்கள் (confessions) சொல்லாடல்கள் வெளிப்படுத்துவதன்மூலமே இன்றைய ஆற்றல்வாய்ந்த ஆதிக்கவெறி பிடித்த வாழ்க்கையை உடைத்தெறியமுடியும்.

இத்தகைய நிகழ்வுகளே இல்லை என்பது போல மெளனித்து இருப்பவர்கள் அதிகாரத்தின் முகமூடிகளை அணிந்துகொண்டு மனித உடல்களை அடக்கியாள்வதில் இன்பம் அடைபவர்கள். இவர்களே நாளைய பாசிசத்தின் கருத்துருவத்தூண்கள்.
இத்தகைய நிகழ்வுகளின் இருப்புகள் சமூகத்தின் அடித்தளத்தில் சலனமுறுவதை அனைவரும் அறிந்தே உள்ளனர். அவ்வகையில் இந்நாவல் பெரும் பாயச்சலைச் சாதித்துள்ளது.

இந்நாவலை எதிர்கொண்டு முகஞ்சுளிக்கும் 'முற்போக்காளர்களை'க் கொஞ்சம் கவனிப்போம். இந்நாவலின் பாலியல் கட்டுமானங்கள், மதவாதிகள், ஒழுக்கவாதிகள், அழகியல்வாதிகள் ஆகியோரை ஒருசேரத் தாக்குகிறது. இதை புரிந்துகொள்ள முடியாத முற்போக்காளர்கள் தாங்களும் பாலியலை பொறுத்தவரை அதே மதவாதிகள், நல்லொழுக்கவாதிகள் ஆதிக்கத்திலிருந்து விடுபடவில்லை என்பதைப் புரிந்துகொள்வதில்லை.

இப்படிப் பாலியல் பற்றி நாம் பேசுவதால் 'இவர்கள் அனைவரும் பாலியல் வக்கிர உணர்வுகள் உடையவர்கள்' என்ற மலினமான கருத்திற்குச் செல்பவர்கள் ஏற்படுத்தும் மாயையை அழிப்பதே நாவலின் அடுத்தமைந்த தளமாகும்.
இன்று அதிகாரப் பரவலைச் செய்யும் கருத்துருவ எந்திரங்களுடன் துணைக் கருவிகளாய் செயல்படுபவர்களே இந்த இணைக்கலாச்சார மாயையை ஏற்படுத்தும், சிறுபத்திரிகையாளன், இலக்கியவாதி, நாவலாசிரியன் ...etc.. etc.. ஆவார்கள். இவர்கள் ஏற்படுத்தும் மாயையை அழிப்பதில் நாவல கவனம் செலுத்தும் தளத்திற்கு செல்வோம்.

குறிப்புகள்.
(*) பாலியல் அரசியல் (Sexual Politics) பற்றி தமிழில் முதன்நிலை அறிமுகமற்ற சூழலில் இந்நாவலும் இக்கட்டுரையும் வெளிவருகிறது. பாலியலுக்கும், அரசயலுக்கும் இடையிலான உறவ பற்றியும், பாலியல் ஒரு விஞ்ஞானம் என்றரீதியில் பல ஆய்வுகளுக்கு உட்பட்டிருப்பது பற்றியும் நிறைய பேசலாம். ஆனால், கட்டுரையின் எல்லைக்கு வெளியே இருப்பதால் அது குறித்து மேலதிக விளக்கம் இல்லை.
பிராய்டு தொடங்கி இன்றைய பெண்ணிலைவாதிகள்வரை பாலியல் அரசியல் பற்றி கருத்துகளை ஆராய்ந்துள்ளனர். இங்கு பாலியலுக்கும், அதிகாரத்தழற்கும் இடையிலான உறவு பற்றிய கருத்துக்கள் பெரும்பாலும் மிஷேல் ஃபூக்கோவினுடையவை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

(**) 1960-களில் ஜெர்மனில் வெளிவந்த ஹ்யூபட் ஃபிக்ட் எழுதிய 'டீ பலேட்டா' என்ற நாவல் குறித்து 'மார்ஷல் ரைஷ்-ரானிக்கி' எழுதியுள்ள விமர்சனம் ஒன்று ஜெர்மானிய புத்திலக்கியம் என்ற நூலில் வெளிவந்துள்ளது. (1981 தென்மொழிகள் புத்தக நிறுவனம் - சென்னை) அந்நாவலில் நாயகன் யக்சி கூறுகிறான் "அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாலும், கொலை, பொய்மை, கொள்ளை, சிததிரவதை, கூட்டாக கொன்று குவித்தல், பொய்ச்சான்று புகலுதல், நீதிபதி பொறுப்பை தவறாக பயன்படுத்துதல்,ஆசிரியர் பொறுப்பை தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபடுவதாலும் குற்றவாளி வர்க்கத்தில் சேராமல் தப்பித்துக் கொண்டவர்களை மனதில் கொண்டு பார்த்தால், குற்றவாளி வர்க்கத்தில் சேர்ந்திருபப்தே பெரும் கெளரவம் என்று தோன்றக்கூடும்" (பக். 384)

(அடுத்தது நிறைவு பகுதி) -ஜமாலன் (பறை-1990.)
image : CRANACH, Lucas the Elder - Adam and Eve - 1528
இடுகையிட்டது ஜமாலன் நேரம்
document.write(tamilize('11/26/2008 09:34:00 AM'))

லேபிள்கள்: , , ,

Thursday, November 13, 2008

மதப் போராட்டத்தின் பின்னணி என்ன?



தோழர்களே! இன்று இந்தப் பரந்த இந்திய கண்டத்தில் இமயம் முதல் கன்னியாகுமரி வரையில் -அநேகமாக எல்லா முக்கிய நகரங்களிலும், சிற்சில கிராமங்களிலும் கூட பல தரப்பட்ட குறிப்பாக, இந்து -முஸ்லிம் கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நடக்காத இடங்களில் நடக்கும் படியாக அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் பொறுப்பற்ற கலகக்காரர்களும், அரசியல் தேசியப் பத்திரிகைகளும் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றன.தமிழ் நாட்டில் இந்து -முஸ்லிம் கலகம் அதிகமில்லையானாலும் இப்போது நன்றாய் விதை ஊன்றப்படுகிறது.


பழைய காலத்தைப் போலவே, ஆரியர் -திராவிடர் போராட்டம் வெகு நாட்களாக நடந்து கொண்டு இருக்கின்றது. இவை யாவும் இதுவரை அரசியல் போர்வையில் இருந்து கொண்டு போரிட்டு வந்தாலும் -இன்று பச்சையாய் ஜாதி மதப் போராட்டம் தான், இதுவரை நடந்துவந்த அரசியல் போராட்டம் என்பதாக ஆகிவிட்டது.கிறித்துவ மதமும், இஸ்லாமிய மதமும் ‘ஒரு கடவுள்தான் உண்டு, மக்களில் ஒரு சாதிதான் உண்டு' என்று சொல்கின்றன.
ஆனால், அவர்கள் இருவர் அல்லாத இந்த நாட்டு மக்கள், ஆரியப் பழங்காலக் காட்டுமிராண்டி மதத்தைச் சேர்ந்தவர்கள் -பல கடவுள்களைக் கற்பித்துக் கொண்டு, மக்களில் பல சாதிகள் இருப்பதாக ஏற்பாடு செய்து கொண்டு நடைமுறையிலும், அது போலவே பல கடவுள்களையும் அக்கடவுள்களுக்கு உருவங்களையும் வைத்து பூசை செய்து கொண்டு, பல சாதியாகப் பேதப்படுத்தி நடத்தி -ஒரு சாதியை மற்றொரு சாதி அழுத்தி அடக்கி ஆண்டு வருகிறது.
இந்த நிலை இஸ்லாம், கிறித்துவம் அல்லாத இந்து மதத்திற்கு அடிப்படையிலேயே மாறுபட்ட நிலையாக இருப்பதோடு, இந்த இழிதன்மையில் உள்ள மக்கள், அறிவு வளர்ச்சியும் மனிதத்தன்மையும், மான உணர்ச்சியும் கொண்டால் -எந்த மனிதனும் தன்மதத்தைத் தானே இகழவும், வேறு மதத்தை சாடவும் நினைத்துத்தான் தீருவான்.


ஆதலால், மதம் மாறும் உணர்ச்சி ஏற்படாமல் இருக்கவும், இன்றைய காட்டு மிராண்டி நிலையைப் பாதுகாக்கவும் செய்யப்படும் முயற்சிகள் தான் -பெரிதும் இன்று மதப் போராட்டமாகவும் அரசியல் போராட்டமாகவும் இருந்து வருகின்றன.ஆகவே மதத்தை வைத்து, மதப்போர்வை போட்டுக் கொண்டு மற்ற மக்களை ஏமாற்றி, மேன்மையாக வாழும் மக்கள்தான் இது விஷயத்தில் கவலைப்படுவார்களே தவிர, சாதாரண யோக்கியமான உணர்ச்சியுள்ள மனிதன் எவனும் -ஒருவன் வேறு மதத்திற்குப் போகிறானே என்று கவலைப்பட இடமேயில்லை என்பதோடு, ‘எப்படியாவது அவனுக்குப் பறப்பட்டம், சூத்திரத் தன்மை போனால் நலம்' என்போம்.
இந்து ஆட்சி ஏற்பட்டு விட்டதாலேயே, ராம ராஜ்யம் ஏற்படுவதாலேயே -நமது சூத்திரத் தன்மையும், பஞ்சமர், கடைசாதித் தன்மையும் மாறிவிடப் போவதில்லை. நம்மில் இருந்து இஸ்லாமாக மாற்றப்பட்டவர்களும், கிறித்தவர்களாக மாற்றப்பட்டவர்களும் அல்லது தானே மாற்றம் அடைந்தவர்களும் இன்று எதில் கஷ்டப்படுகிறார்கள்? எதில் கெட்டுப் போய்விட்டார்கள்?


ஆகவே, ஓர் இந்து வேறு மதத்திற்குப் போவதென்றால், மாற்றப்படுவதென்றால், கடை சாதியான் மேல் சாதியாக ஆக்கப்பட்டான் என்றுதான் அர்த்தம்.-1946இல் சென்னையில் திப்பு சுல்தான் நினைவு நாளில் பங்கேற்று பெரியார் ஆற்றிய உரை, ‘குடி அரசு' -16.11.1946

Wednesday, November 12, 2008

முதிர்க் கன்னிகள்

நாங்கள்
பிரசுரிக்கப் படாத
புத்தகங்கள்..!

எங்களில்
இலக்கிய நயமிருந்தும்
இலக்கண முறையிருந்தும்
கைக் கூலி
கொடுக்கப் பண மில்லாத
குறையினால்
படிக்கப் படாமல்..
கைப் பிரதியாகவே..
காலமெல்லாம்...!

எங்களை
விலை கொடுத்து
வாங்கிப் பிரித்து
வார்த்தைகளில்
விழும் அமுதம் பருகி
வாக்கியங்களின்
இன்பம் சுவைத்து

முழுவதும் படிக்காமல்
அவசர... அவசரமாய்...
முன் அட்டையில் மயங்கி
வாடைகைக்கு கிடைக்குமா - என
வாசகன் கேட்கிறான்?

என்ன சொல்வது..
ஏளனம் செய்வதில்
எவர்க்கும் சளைத்தவனல்லவே
எந்தமிழ் வாசகன்!!!

எழுதியவரே எம்மை
ஏரெடுத்துப் பாராதபோது
வீணில் வாசகனைக் குறைகூறி
விளையும் பயன் என்ன..??

பெற்றோரே...
மற்றோரே...

கரையான் அரித்து
கரைந்து போகுமுன்னே..
காமுகனின் கோரப்பசியால்
களங்கப் படுமுன்னே...
கரையேறத் துடிக்கின்றோம்..
காப்பாற்ற அழைக்கின்றோம்..

இன்னும் நங்கள்
பிரசுரிக்கப் படாத
புத்தகங்கள்..!!!

எண்ணம்: இனியஹாஜி, சிந்தனை: நவம்பர் - 2008, தோஹா - கத்தார்

Tuesday, November 11, 2008

மனிதா மனிதா



மனிதா.. நீ...
மாறுவ தெப்போது?

மதமென்ற பெயரால்
மிருக வெறியோடு
மாற்றானின்
மதத்தையா அழிக்கிறாய்?
மனிதர்களை..
மனிதப் புனிதர்களை...

நீ இந்த
மண்ணுக்கு மண்ணனாகி
மகிழ்வதற்கு - நாளும்
மண்ணின் மைந்தரல்லவா
மடிகின்றார்...!

இனம்.. மதமென்று
இனம் பிரித்துப் பாராது
இந்தியனாய்ப் பார்...
இன்னும் மேலே
மனிதனென்றே பார்...!

மழையைப் பார்..
மலரைப் பார்..
காற்றைப் பார்..
கடலைப் பார்..
விண்ணைப் பார்..
மண்ணைப் பார்..
இறைவன் படைப்பின்
இரகசியம் பார்..!!

வெடி குண்டும் அணு குண்டும்
வேண்டாமே நமக்கு...
அன்பு போதும் - அதனால்
அகிலத்தையே வெல்லலாம்!!!

- கோவைக் கலவத்தின் போது எழுதியது.

மழையா மனிதனா



விடியல் பொழுதில்
வயல்வெளி சென்றேன்..
பசும் பயிர் காய்ந்து
பாளம் பாளமாய்...
மனசும் தான்..!

மண்ணும் மழையும்
மாறிய காரணம்..??
மனிதன் தான்..!!

கட்சிகளுக்கும்
ஆட்சிகளுக்கு மிடையாயான
நீயா.. நானா.. போட்டியில்
காவிரி நீர் வரவில்லை...
மாறாக...
கண்களிலிருந்து
ஊற்றுக்கண்...!

அட.. அடடா..
ஊருக்கே
உணவு தந்தவன்
உணவுத் தட்டுடன்...
கஞ்சித் தொட்டிக்கு முன்பே
உணர்வு இழந்தவனாக...!

மழையே... மழையே...
மனிதன் தவறு செய்தான்
மன்னிப்பாயாக...

மண்ணை முத்தமிட
மறவாமல் வருவாயா??
ஏழைகளாகிய எங்களின்
மனங்களை மகிழச்செய்வாயா???

எண்ணம்: இனியஹாஜி, சிந்தனை: ஆயங்குடி - 2002

Saturday, November 8, 2008

என்னுரை!




என் அன்பின் சொந்தங்களே!

எல்லா வளமும் பெற்று
எல்லோரும் வாழ வாழ்த்துகிறேன்!

நான்
இலக்கியம் தெரியாதவன்..
இலக்கணம் பயிலாதவன்..
எதுகை, மோனை என
எதுவுமே அறியாதவன்..!

ஆனால்
உண்மை பேசுவதிலும்
நன்மைகள் செய்வதிலும்..
நேர்மையாய் நிற்பதிலும்..
வாய்மையோடு வாழ்வதிலும்..
எளிமையாய்.. பொறுமையாய்..
இருப்பதில் தனித்து நிற்கின்றேன்..!

இறைவனுக்கல்லாது..வேறு
யாருக்கும்..எதற்கும் அஞ்சிடாது...
துஞ்சிடாது.. துயர்ந்திடாது..
இறைத்தொண்டனாய் இருக்கிறேன்..!

நான் யார் என்பதை..
என்னால் எது முடியுமென்பதை
அறிந்து கொண்டதால்..
அறிஞனாக முயல்கிறேன்..!

அருள் மறையாம் திருமறையின்
அண்ணல் நபி வழிமுறையின் படி
பகுத்தறிவாளர் பெரியாரின்
பெருந் தொண்டனாய் வாழ்கிறேன்..!

வாழ்வினை அணுவணுவாய் இரசித்து
இயற்கையாய் வாழ்கிறேன்..
இயல்பாய் வாழ்கிறேன்..
இஸ்லாமியனாய் வாழ்கிறேன்..!

தோழர்களே! - நான்..
சாமானியன்..
சமரசங்களுக்கு
கட்டுப்படாதவன்..!

நான் போராளி..
போர்க்கோலத்துடனேயே..
மரக்கலத்திலும்..
விண் கலத்திலும்..
கார் நிலத்திலும் வாழ்பவன்..!

நான் ஏகலைவன்..
எவருக்கும்
என் கட்டைவிரலைத்
தரமாட்டேன்..!

என்னைப் படியுங்கள்..
பிழையிருந்தால் பதியுங்கள்...!

மாறாத அன்புடன்,
இனியஹாஜி

Friday, November 7, 2008

எங்கள் இந்திய தேசம்!




இனம், மொழி, வழி பலவாயினும்
இணைந்தே வாழும் இந்திய தேசம்..
இந்து, முஸ்லிம், கிருத்துவர்கள்...
இணை பிரியாத எங்கள் தேசம்!

விந்திய மலை போல் வீழ்ந்திடாத
வீரமும், வலிமையும் மிகைத்த தேசம்..
மண் வளமும், மனித வளமும்
மிகத்தே நிற்கும் மாண்புறு தேசம்!

வேற்றுமையில் ஒற்றுமை காணும்
வித்தியாசமான வியப்புறு தேசம்..
ஆற்றுமை, ஆற்றாமை இருந்திடினும்
இயல்பாய் வாழும் இன்புறு தேசம்!

கட்சிகள், காட்சிகள் கலைந்திருந்தாலும்
காண்போர் கண்படும் களிப்புறு தேசம்..
கனவுகள் நனவுகளாய் ஆகாவிடினும்
கனிந்தே வாழும் விழிப்புறு தேசம்!

நதிகள் இணைந்து, நன்மைகள் வளர்ந்து
மதவெறி மாய்ந்து, மனிதம் மலர்ந்து..
ஏழ்மை நீங்கி.. தேசம் ஏற்றம் பெற்றிட
எடுப்போம் சபதம்.. இன்றே நாமும்...!!!

-எண்ணம்: இனியஹாஜி, இடம்: சோழபுரம், நவம்பர் - 2001