Thursday, October 28, 2010

ஈழம்...

புலம் பெயர்ந்த எங்கள் வாழ்வு
நிலம் மறந்தல்ல....
களம் இழந்த எங்கள் பயணம்
வளம் பெற்று... நலம் பெற்று...
நிலம் மீட்கும் நாளை நோக்கி...

தம்பி போனாரா -
இருந்தென்ன..
இளம் தம்பிகள் எங்கும் உளமே...

அண்ணன் வருவாரா???
அவர் எங்கே போனார்...
எங்களுடனேயே....

கன்னிநிலம் மீட்க..
காணி நிலம் காக்க...
வன்னிக்காடு விட்டு
வளைகுடா வந்தோமே...

வயல் காடு..சாக்காடு ஆச்சி..
அயல் நாடு .. ஆதரவாச்சி...
ஈழம் மீட்கும்வரை...
பாரம் சுமப்போமே..

வேதனையுடன்...
இனியஹாஜி

Wednesday, October 21, 2009

தமிழ் மண்ணே வாழ்க!




தமிழ் மண்ணே வாழ்க!
தமிழ ரெல்லாம் வாழ்க!!
தமிழும் நாமும் வேறல்ல..
தமிழ்தாம் நமக்கு வேர் ஆகும்...!!!

தமிழ் எங்கள் உயிருக்கு வேர்..
தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..

அன்பு செய்தால் அடங்குவோம்!
வம்பு செய்தால் அடக்குவோம்!!
தெம்பு எமக்கு இருக்குடா..
தம்பியை நினைச்சு பாரடா...!!!

ஒன்றே இறை.. ஒன்றே மறை...
ஒன்றே இனம்.. அதை நன்றாய் நினை...!
எல்லா மொழியும் நம் மொழிதான்...
மவுனம் மட்டுமே பொதுமொழியாம்...


யாதும் ஊரே... யாவரும் கேளிர்...
அன்பு மட்டுமே...எங்கள் ஆயுதம்...!

மனிதம் போற்றுவோம் - அதில்
புனிதம் காட்டுவோம்!
இரத்தல் இழிவுடா - தம்பி
உழைத்தால் உயர்வுடா...!

உண்மை பேசுடா - அதில்
நன்மை இருக்குடா...
வாய்மை வெல்லவே - நீ
வாழ்ந்து காட்டடா...!

பெண்மை போற்றடா - அவர் நம்
அன்னையர் அல்லவா!
இயல்பாய் வாழ்ந்திட - நாமெல்லாம்
இணைய வேண்டுமல்லவா...!

ஆசை அடக்கவே - கொஞ்சம்
அறிவைக் கூட்டடா!
வேஷம் கட்டிய - வீணோரை
விரட்டி ஓட்டடா...!!

உலகம் முழுவதும்
வாழும் நம் உறவுகள்...
வானம்பாடி போல்
விரிக்கட்டும் நம் சிறகுகள்...



தமிழன்புடன்,
இனியஹாஜி, தோஹா - கத்தார்.
நாள்: 21 - 10 - 2009

Sunday, January 18, 2009

இஸ்ரேலை காக்கும் பைபிள் கனவுகள்





"இஸ்ரேலுக்கு அமெரிக்கா வழங்கிவரும் ஆதரவு குறித்து வியக்கும் நீங்கள், அதற்குக் காரணம் அமெரிக்காவில் இருக்கும் யூத நலன் காக்கும் சங்கங்கள் என்று நினைக்கிறீர்கள். உண்மையில் எமக்கு ஆதரவாக இருப்பது கிறிஸ்தவ நலன்காக்கும் சங்கள்கள்தான்." - அமெரிக்காவில் பத்திரிகை நிருபர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த முன்னாள் இஸ்ரேலியப் பிரதமர் நெத்தன்யாகு.


மேற்படி கூற்றில் உண்மையில்லாமல் இல்லை. அமெரிக்காவில் இயங்கி வரும் பல்வேறு புரட்டஸ்தாந்து , பெந்தகொஸ்தே பிரிவுகளைச் சேர்ந்த மதவாத அமைப்புகள் இஸ்ரேலுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்வதும் நிதி திரட்டுவதும் இரகசியமல்ல.



இந்தச் செய்திகள் மறுபக்கத்தில் அமெரிக்காவில் கிறிஸ்தவ மத அடிப்படைவாத அமைப்புகள் தற்போது அரசியலிலும் ஈடுபட்டுவருவதை மெய்ப்பிக்கின்றன.சர்வதேச அரங்கில் மீண்டும் சூடுபிடித்துள்ள இஸ்ரேலிய-பாலஸ்தீன பிரச்சினையில் இந்த கிறிஸ்தவ அமைப்புகள் வெளிப்படையாகவே இஸ்ரேலின் பக்கம் நிற்கின்றன. அதிலும் அவர்கள் தீவிரமான அரசியல் நிலையெடுத்துள்ளனர்.


தற்போது அமெரிக்க அரசினால் அறிமுகப்படுத்தப்பட்ட சமாதான வரைபடத்திற்கு உலக நாடுகள் மத்தியில் ஆதரவு எழுந்த போதும் கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் மத்தியில் எதிர்ப்புக் கிளர்ந்துள்ளது. இஸ்லாமியர் மனதைப்புண்படுத்தும்படி பேசி சர்ச்சையை உருவாக்கிய பாதிரியார் பேட் றொபேர்ட்சன் போன்றவர்கள் தாம் இந்தச் சமாதானத் திட்டத்தை எதிர்ப்பதாக பகிரங்கமாகக் கூறிவருவதுடன், சமாதானத்திற்கெதிராக கையெழுத்துகள் வாங்கி அமெரிக்க அரசிற்கு அனுப்பி வருகின்றனர்.


மொத்த அமெரிக்க வாக்காளர்களில் காற்பகுதியினர் இந்தக் கிறிஸ்தவ அமைப்புகள் சொல்வதைக் கேட்பவர்களாகவே உள்ளனர். பாலஸ்தீன எழுச்சிப்போராட்மான 'இன்டிஃபதா' வின் போது கிறிஸ்தவ மதகுழுக்கள் இஸ்ரேலுக்கான தமது ஆதரவைப் பெருக்கிக் கொண்டுள்ளனர்.இவர்கள் இஸ்ரேலிய ஆதரவுப் பிரச்சாரத்துடன் நில்லாது செயலிலும் இறங்கியுள்ளனர்.


இஸ்ரேலில் (ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன நிலப்பகுதிகளில்) சென்று குடியேறும் யூதர்களுக்கு கொடுப்பதற்கென 20 மில்லியன் டொலர்களை அமெரிக்க கிறிஸ்தவ மதகுழுவொன்று திரட்டியுள்ளது. இந்தப்பணம் குடியேற்றக்காரர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்க, வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்ட என வழங்கப்படுகின்றது. இது இஸ்ரேலிய அரசு வழங்கும் உதவித்தொகையைவிட மூன்று மடங்கு அதிகமாகும். மேலும் இரண்டு பிரபலமான பெந்தகொஸ்தே, புரட்டஸ்தாந்து அமைப்புகள் இணைந்து 'குடியேற்றக்காரரைத் தத்தெடுக்கும் திட்டத்தை' அறிமுகப்படுத்தியுள்ளன.


இந்தத் திட்டத்தின்படி 14 ஆயிரம் குடியேற்றக்காரருக்கு தலா 55 டொலர் வீதம் வழங்கப்பட இருக்கிறது.அமெரிக்காவில் இயங்கிவரும் "இஸ்லாமியர் புனர்வாழ்வுக் கழகம்" போன்ற அமைப்புகள் திரட்டும் பணம் தீவிரவாத இயக்கங்களுக்கு ஆயுதம் வாங்கப் போய்ச் சேருவதாகக் கூறி இவ்வமைப்புகளுக்கு அமெரிக்க அரசினால் நெருக்கடி கொடுக்கப்பட்டது. அல்-கைதாவுடன் தொடர்பிருப்பதாகக் கூறி சில அமைப்புகள் தடைசெய்யப்பட்டன.


இந்தக் குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது அரசாங்கத்திற்கு இன்றுவரை இயலவில்லை. பொஸ்னிய, செச்செனிய போர்களின்போது சில இஸ்லாமிய உதவிநிறுவனங்கள் போராளிகளுக்கும் உதவி செய்தமை குறித்த செய்திகள் வந்துள்ளன. ஆனால் பொஸ்னியாவிலும், செச்செனியாவிலும் என்ன நடந்தது என்பது பற்றி அமெரிக்க அரசிற்கு அக்றையில்லை. அதுபோல பாலஸ்தீனப் பிரதேசத்தில் தோளில் இயந்திரத் துப்பாக்கியுடன் திரியும் சட்டவிரோத யூதக் குடியேற்றக்காரர்களுக்கு கிறிஸ்தவ அமைப்புகள் வழங்கும் உதவி குறித்தும் அமெரிக்க அரசுக்கு அக்கறையில்லை.யூதக் குடியேற்றங்களுக்கு அமெரிக்காவிலிருந்து எவ்வளவு பணம் வருகிறது என்பது தெரியாது.


நூற்றுக்கணக்கான கிறிஸ்தவச் சபைகள் யூதக் குடியேற்றக்காரர்களுக்கான மருந்துகள், பாடசாலை உபகரணங்கள் , குண்டு துளைக்காத பேரூந்து வண்டிகள் என்பன வாங்குவதற்கெனக்கூறி நன்கொடையளிக்கின்றன. பல தமிழ் கிறிஸ்தவர்கள் அங்கம் வகிக்கும் பில்லி கிரஹமின் (அமெரிக்காவில் பெரிய கோடீஸ்வரன்) "Safe Harbour International" என்ற கிறிஸ்தவச் சபை தென்சூடான் கிளர்ச்சிக் குழுவான SPLA க்கு உதவி வழங்கியமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கிறிஸ்தவச் சபைக்கும் இஸ்ரேலுக்குமான தொடர்புகள் குறித்து தகவல்கள் கிடைக்கவில்லை.


இருப்பினும் இஸ்ரேல் சார்பு அரசியல் நிலைப்பாடு பகிரங்கமாகத் தெரிந்த விடயம்."கிறிஸ்தவ- சியோனிஸ்டுகள்" என அழைக்கப்படும் இந்த கிறிஸ்தவ மதவாதக்குழுக்கள் இஸ்ரேலை ஆதரிப்பதற்கான காரணம் என்ன ? "பைபிள் எனது சமாதான வரைபடம்" எனக்கூறுகின்றன சமாதானப் பேச்சுவார்தைகளை எதிர்க்கும் கிறிஸ்தவக் குழுக்கள். அவர்கள் பைபிளில் உள்ளதை அப்படியே நம்புகிறார்கள்.


பைபிளில் கூறியுள்ளபடி ஆண்டவரால் வாக்குறுதியளிக்கப்பட்ட புனித நிலத்திற்கு யூதர்கள் வந்து சேர்ந்து விட்டார்கள். இனிக் கர்த்தரின் வருகைக்காக அவர்களின் இருப்பை நிச்சயப்படுத்த வேண்டிய கடமை தமக்குள்ளதாகக் கருதுகின்றனர். "சமாரியாவில் மீண்டும் நீங்கள் திராட்சை மரங்களை நடுவீர்கள் (ஜெரேமியா) " என்ற கூற்று பைபிளில் வருகிறது என்பதற்காக, சமாரியா (இன்று மேற்குக் கரை என்றழைக்கப்படும் பாலஸ்தீனப் பகுதி) சென்ற கிறிஸ்தவர்கள் அங்கே யூதக்குடியேற்றங்களில் திராட்சைக் கன்றுகளை நட்டனர்.


இவ்வாறு பைபிள்தான் எமது வழிகாட்டி, சட்டநூல் எல்லாமே அதன்படிவாழ்வதுதான் சிறந்தது என்று நம்பும் இவர்களை "கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள்" என அழைப்பதே பொருத்தம்.யூதக் குடியேற்றக்காரரும் பைபிளின்படி இந்த நிலம் தமக்கு உரித்தானதென நம்புகின்றனர். பைபிளின் பழைய ஏற்பாடு யூத மதத்தவருக்குரியது. இதனை அவர்கள் "தோரா" என அழைப்பர். 50 ஆண்டுகளுக்கு முன்பு இன்று இஸ்ரேல் என்று அழைக்கப்படும் நாடு, பாலஸ்தீனம் என்று அழைக்கப்பட்டது.


அப்போது அங்கே வாழ்ந்த யூதர்கள் மிகச் சிறுபான்மையினர். பிற்காலத்தில் ஐரோப்பாவில் இருந்து வந்த யூதர்களே இன்று இஸ்ரேலியப் பெரும்பான்மைச் சமூகமாக வாழ்கின்றனர். இவர்கள் வாழும் பெருமளவு நிலங்கள் அங்கே காலங்காலமாக வாழ்ந்து வந்த பாலஸ்தீன அரபுக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டவை. ஆனால் இந்த அத்துமீறலை பைபிளைக் கொண்டு நியாயப்படுத்துகின்றனர்.


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமது மூதாதையர் விட்டுச் சென்ற இடத்திற்கு தாம் மீண்டும் வந்துவிட்டனராம். ஆகவே இஸ்ரேலின் சுதந்திரத்திற்கு முன்பு இடம்பெற்ற போர் பாலஸ்தீன மக்கள் மீதான பயங்கரவாத வன்முறை (அன்றைய பிரிட்டிஷ் காலனிய அரசே இதனைக் கூறியது) சொத்துகள் சூறையாடல் எல்லாமே பைபிளின் அடிப்படையில் நியாயமானவை. இதனைத்தான் 1967 ன் பின்பு ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன நிலங்களில் குடியேறியுள்ள யூதர்கள் தொடர்கின்றனர்.


இஸ்ரேலின் மேற்குப் பகுதியில் வாழும் யூதர்களில் பலர் மதசார்பற்ற ஐரோப்பியக் கலாச்சாரத்தைப் பின்பற்றுபவர்கள். இதற்கு மாறாக பாலஸ்தீனப் பகுதிகளில் வாழும் யூதர்கள் மத நம்பிக்கையாளர்கள். உடைஉடுப்பதில், உணவுப்பழக்கத்தில் மத ஆச்சாரங்களைப் பிசகாது பின்பற்றுபவர்கள். சமாதான ஒப்பந்தப்பிரகாரம் சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை இஸ்ரேலிய அரசு வெளியேற்ற முயன்ற போது "இந்த நிலம் எமக்கு ஆண்டவரால் அளிக்கப்பட்டதனால், நாம் வெளியேறமாட்டோம்" என்று அடம் பிடித்தார்கள்.


குடியேற்றக்காரர்கள் அங்கே கடவுளை மட்டும் வணங்கிக் கொண்டு சும்மாவிருக்கவில்லை. யூதத் தீவிரவாதிகள் என்று அறியப்படுவோரில் பெரும்பான்மையானோர் இந்தக் குடியேற்றக்காரர்கள். வெளிப்படையாக இனவாதப் பிரச்சாரம் செய்யும் "காஹ்" என்ற அமைப்பு அமெரிக்க அரசினால் வெளிநாட்டுப் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டது. பலஸ்தீனப் பாடசாலைகளுக்குக் குண்டுவைத்தல், பாலஸ்தீன வயல்களை எரித்து நாசம் செய்தல் என்பன இந்த இயக்கத்தின் அறியப்பட்ட சில செயல்கள்.


இந்த இயக்க உறுப்பினர்களில் ஒருவன் பள்ளிவாசலுக்குள் தொழுதுகொண்டிருந்த பலஸ்தீனர்களைச் சுட்டுக்கொன்றான். பின்னர் அவன் ஒரு மனநோயாளி என அறிவித்தார்கள்.யூதக் குடியேற்றக்காரரின் தீவிரவாத அமைப்புடனான தொடர்பு பகிரங்கமாகத் தெரிந்த பின்னும் ஒவ்வொரு குடியேற்றக்காரருக்கும் துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன. ஆயுதபாணிக் குடியேற்றக்காரர்கள் அடிக்கடி விளையாட்டுக்காக அயலில் வாழும் பலஸ்தீனர்கள் மீது சுடும் சம்பவங்கள் நடந்துள்ளன.


பாலஸ்தீனரின் குடியிருப்பு மீது கல்வீசுவது, தம்மைக் கடந்து போகும் பாலஸ்தீனர்களை இனவாத வார்த்தைகளைப் பிரயோகித்து இழிவுபடுத்துவது என்பன இவர்களுக்குச் சர்வசாதாரணமானவை. எந்தவொரு சர்வதேசச் செய்தி ஊடகமும் இந்தச் சம்பவங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை.இஸ்ரேலியர்கள் மீதான இன்னொரு குற்றச்சாட்டு பிராந்திய விஸ்தரிப்புப்பற்றியது.


ஒருமுறை இஸ்ரேலின் தேசியக்கொடியைப் பாருங்கள்.அதன் நடுவில் நட்சத்திரமும் மேலும் கீழுமாக இரண்டு நீலக்கோடுகளும் இருக்கும் நட்சத்திரம் முன்னொருகாலத்தில் இஸ்ரேலை ஆட்சி செய்த டேவிட் மன்னனின் அரச இலச்சினை. அப்படியானால் அந்த இரண்டு கோடுகள் ? இஸ்ரேலிய அரசு இதுபற்றித் தெளிவான விளக்கம் கொடுக்கவில்லை. ஹமாஸ், ஹிஸ்புள்ளா போன்ற அரபு-இஸ்லாமிய வாத விடுதலை இயக்கங்கள் விசித்திரமான விளக்கம் கொடுக்கின்றன.


அந்த இருகோடுகளில் ஒன்று ஈராக்கில் ஓடும் ஈயூப்பிரதீஸ் நதியையும் மற்றையது எகிப்திலோடும் நைல்நதியையும் குறிக்கும். ஆகவே இவற்றிற்கிடைப்பட்ட பிரதேசத்தை இஸ்ரேல் உரிமை கோருகிறது என்பது அவர்களது வாதம். பைபிளில் கூறப்பட்டுள்ள ஆபிரகாமிற்கு ஈயூப்பிரதீஸ், நைல்நதிகளுக்கடையிலான பிரதேசத்தை வழங்க ஆண்டவர் விரும்பியதாக வரும் ஒரு கூற்றைத் தவிர இதற்கு வேறு ஆதாரமில்லை.


பைபிளில் கூறப்பட்டுள்ள பல இடங்கள் இன்றைய இஸ்ரேலில் மட்டுமல்லாது ஜோர்தான், எகிப்து, சிரியா, ஈராக் போன்ற நாடுகளிலும் உள்ளன. பைபிளை நம்புபவர்களுக்கு இவையெல்லாம் புனித ஸ்தலங்கள்தான்.ஈராக் பிரச்சினையின் போது பைபிள் கதைகள் அரசியல் மயமாகின. ஈராக்கின் பழம்பெருமை வாய்ந்த புராதனப்பொருட்களின் கொள்ளைக்குப்பின்னால் இஸ்ரேலியர்கள் இருந்ததாக ஈராக்கியர்கள் தெரிவித்தனர். அதேபோல வட ஈராக்கின் குர்திய விடுதலை இயக்கங்கள் இஸ்ரேலியக் கைக்கூலிகள் என்றும் சில துருக்கியப் பத்திரிகைகள் எழுதின.


எது எப்படியிருந்தபோதும் ஈராக்கில் சதாமின் வீழ்ச்சியினால் தனக்குச் சவாலாக இருந்த எதிரி இல்லாமல் போய்விட்டதாக இஸ்ரேல் மகிழ்ந்தது மட்டும் உண்மை.ஈராக் அமெரிக்க ஆக்கிரமிப்பின் கீழ் வந்தமை அரசியல் ரீதியில் இஸ்ரேலுக்கு நன்மையளிக்க வல்லது. "இஸ்ரேல் யாராலும் வெல்லமுடியாத நாடு" என்ற பைபிள் வாசகம் மெய்ப்பிக்கப்பட்டு விட்டதாக கிறிஸ்தவ சியோனிஸ்டுகள் தமது பிரச்சாரங்களில் கூறிவருகின்றனர். ஆனால் இவர்கள் எப்போதும் பைபிளில் தமக்குப் பிடித்த பகுதிகளை மட்டுமே வாசிக்கும் பழக்கமுடையவர்கள்.


பைபிள் ஒருபோதும் இஸ்ரேலியர்களின் செயல்களை முழுக்கமுழுக்கச் சரியென்று வாதாடவில்லை. இஸ்ரேலியர்களின் மனித உரிமை மீறல்களை கடவுள் கண்டித்துத் தண்டனை கொடுத்ததாக பலவிடயங்களில் வருகிறது. சுவாரசியமாக, பாபிலோனிய (இன்று ஈராக்) மன்னனிடம் அடிபணியவைப்பேன் என்று கடவுள் கூறுவதாகவும் ஒரு வாசகம் உள்ளது. (ஜெரேமியா 27: 6-17).யாரும் எந்த நாட்டிற்கெதிராகவும், மனித உரிமைகள் மீறல் பற்றிக் கண்டிக்கலாம்.


இஸ்ரேலைத் தவிர. யூத நலன் காக்கும் சங்கங்கள் இஸ்ரேலுக்கு எதிரான விமர்சனங்களை, கண்டனங்களை யூத எதிர்ப்புப் பிரச்சாரங்களாகத் திரிபுபடுத்துகின்றன. இந்தக் குற்றச்சாட்டுகளுக்குப் பயந்து பல ஐரோப்பியர்கள் பாலஸ்தீனப் பிரச்சினையில் இஸ்ரேலைக் கண்டிக்கத் தயங்குகின்றனர். ஏனெனில் கண்டிப்பவர்களை உடனடியாக நாஸிஸத்துடன் தொடர்புபடுத்திக் கதைக்கும் பழக்கம் யூதர்கள் மத்தியில் உள்ளது. பைபிளில் யூதர்களின் தீர்க்கதரிசி மோஸஸ் கூட இஸ்ரேலியர்கள் தமது நாட்டில் வாழும் அந்நியர்களை அடக்கக்கூடாது, சமமாக நடத்தவேண்டும் என்று கட்டளையிடுகிறார்.


"உன்னைப் போலவே அந்நியனையும் நேசி, நீங்கள் எகிப்தில் அந்நியர்களாக இருந்ததை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள்" எனவும் பைபிள் கூற்றுண்டு. இவையெல்லாவற்றையும் இன்று பலஸ்தீனர்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக அடக்கும் இஸ்ரேலியர்கள் தெரிந்து கொள்ள விரும்பவில்லை."சமாதானத் திட்டத்திற்கு ஆதரவளிக்காதீர்கள். கடவுளின் சாபத்திற்குள்ளாகாதீர்கள்" என்று அமெரிக்க மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்கின்றன கிறிஸ்தவ மத அடிப்படைவாத அமைப்புகள். அவர்களைப் பொறுத்தவரை இஸ்ரேலிய இராணுவத்தின் படுகொலைச் செயல்கள் எல்லாம் கடவுளின் விருப்பப்படிதான் நடந்தன.


இவ்வாறு கடவுளின் பெயரால் மனித உயிர்களை அழிப்பதை நியாயப்படுத்துபவர்கள் யூத-கிறிஸ்தவ மதங்களில் இருப்பதை உலகம் கண்டுகொள்வதில்லை. தற்போது இஸ்ரேலுக்கு ஆதரவளிக்கும் கிறிஸ்தவர்களை பல யூதர்கள் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்கின்றனர். இருப்பினும் சில யூத மதத் தலைவர்கள் இந்த கிறிஸ்தவ-சியோனிஸ்டுகளின் உள்நோக்கங்களையிட்டு எச்சரிக்கையாக இருக்கும்படி கூறியுள்ளனர். ஏனெனில், கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் இஸ்லாமியரை மட்டுமல்ல யூதர்களையும் தமது எதிரிகளாக இனங்காண்கின்றனர்.


அவர்கள் ஊழிக்காலத்தின் இறுதியில் தோன்றப்போகும் யேசுக்கிறிஸ்துவுக்காகக் காத்திருக்கின்றனர். அந்த இறுதிப் போரில் யூதர்களும் அழிக்கப்பட்டு விடுவரென நம்புகின்றனர்.சில வருடங்களுக்கு முன்னர், இஸ்ரேலுக்குள் தங்கியிருந்த அமெரிக்கக் கிறிஸ்தவத் தீவிரவாதிகள் சிலர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர்.


ஜெருசலேமில் இருக்கும் அல் அக்ஸா மசூதியைக் குண்டுவைத்துக் தகர்க்கத் திட்டமிட்டதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. உலக முஸ்லீம்களுக்கு மெக்காவிற்கு அடுத்த புனித ஸ்தலமான அல் அக்ஸா தகர்க்கப்பட்டால் ஏற்படப்போகும் பயங்கர விளைவுகள் இஸ்ரேலுக்குப் பாதகமாக இருக்கும் என்பது இஸ்ரேலிய அரசுக்குத் தெரியும். கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள் பைபிளில் குறிப்பிட்ட (உலக அழிவென்ற) ஊழிக்காலத்தைத் தாமே செயற்கையாக உருவாக்கத் துணிந்துவிட்டார்கள் போலும்.
இஸ்ரேல் தொடர்பான முன்னைய பதிவுகள்:


Saturday, January 17, 2009

பாபா.. எங்கள் பழனி பாபா...




பாபா.. எங்கள் பழனி பாபா...

பாபா...
மனிதநேயத்தை
எங்களுக்கு
அறிமுகம் செய்து
வைத்த ஆசானே!
மத நல்லிணக்கத்தை
மதிக்கச்சொன்ன மகானே!

மனிதரில் புனிதனே!
மங்காத சுடரொளியே!
பகுத்தறிவை எமக்கு
போதித்த அறிவொளியே!

உண்மைக்கு
குரல் கொடுத்தாய்!
உரிமையைக் காக்க
உயிரையே கொடுத்தாய்!

நீ
மொழியால் தமிழன்
இனத்தால் திராவிடன்
தேசத்தால் இந்தியன்
மார்க்கத்தால் முஸ்லிமென்றும்

என்னைச்
சிறையில் அடைத்தாலும்
சிலுவையில் அறைந்தாலும்
சித்திரவதை செய்தாலும்
சீரான மார்க்கம் விட்டு
சிறிதளவேனும் மாறேனென்று
மார்தட்டிச் சொன்னாயே!

எங்களுக்கு
தளபதியாய் முன்னின்று
களம் அமைத்துக் கொடுத்தாய்!
கலங்கரை விளக்காக
நலம் பல புரிந்தாய்!

நாங்கள் உன்னை
பாபா.. பாபாவென்றே
பாசத்துடன் அழைப்போம்..!
நீ எங்களை
அத்தா.. அத்தாவென்றே
அன்பொழுக அழைப்பாய்!

நூற்றி இருபத்தாறு முறை - நீ
சிறை சென்றாய்;
அத்தனை முறையும்
நீதான் வென்றாய்!
சட்டம் உன்னிடம் மட்டும்
சரண் அடைந்தது!

நான்
சிறையில் உன்னைச்
சந்தித்த நாளை
மறக்கவே இல்லை!
பழங்கள் கொண்டு வந்தேன்..
பணியாரம் செய்து வந்தேன்...
வெளிநாட்டிலிருந்து
வாசனை திரவியமும்
வாங்கி வந்தேன்!

ஆனால் நீயோ...
செடிகள் கொண்டு வா
பறவைகள் வாங்கி வா
சிறையின் அறையைச்
சுத்தம் செய்திட
சுண்ணாம்பு கொண்டுவா என்றே
ஒவ்வொறு முறையும்
ஒவ்வொன்றாய் கோட்பாய்...!

எத்தனைச் சிறைகள்...
அத்தனையிலும் நீ
பதியம் வைத்த
கன்றுகளெல்லாம் - இன்று
மரங்களாய்...
விருட்சங்களாய்...
உன் நினைவுச் சின்னங்களாய்...
நிழல் தருகின்றன...!

உன்னை வரவேற்க
ஒவ்வொரு சிறையும்
ஆவலாய்க் கத்திருக்கும்!
ஆம்...!
அவைகளுக்குள் - நீ
அடைபடும் நாள் - அவைகளுக்கு
போகிப் பண்டிகை நாள்!
அதற்கு அடுத்தநாளில் - வெள்ளைச்
சுண்ணாம்புச் சட்டையை
சுவர்கள் போட்டுப் பார்க்கும்!

கிழவனின் பொக்கை வாயாய்ச்
சிரிக்கும் தரையின் குழிகளைச்
சிமெண்ட் கலவையால்
சரிசமம் செய்வாய்!
உனக்குத்தான் - எதையும்
சரிசமம் ஆக்குவதில்
சலிப்போ வராதே!

பழையன கழிந்திடவும்
புதியன புகுந்திடவும்
பாதை அமைத்துத்
தந்தவர் நீங்கள்!
சிறைச் சாலையில் - உன்
அதிகாரம் எப்போதும்
கொடிகட்டிப் பறக்குமே!

வெளியில் நீ பேசினால்
கருஞ் சட்டைப்படை
ஆவலாய் கேட்கும்!
உள்ளே பேசினால்
காவலர் படையும்
ஆவலாய் கேட்கும்!

கைதிகள், காவலர்கள்
பார்வையாளர்கள் என்ற
பாகுபாடு பார்க்காது
போதனைகள் செய்வாய்!

நீ
பாடம் எடுக்கும்
பாணியே அலாதிதான்!
கழுவும் மீனில்
நழுவும் மீன்போல
பொடி வைத்துப் பேசுவாய்!
வெடியாய் வெடிக்கும் - உன்
வார்த்தைகளுக்கு
விடை தெரியாத
விலங்குகள் கூட்டம்
வெறிப்பேச்சு என்றே
விளக்கம் கொடுக்கும்!

கலவரம் வருமென்றே
காவிக்கூட்டமும்
காக்கிக் கூட்டமும்
ஊரையே மிரட்டும்...
உளுத்தரைக் கூட்டும்...!

உன்னால் கலவரம்
வந்ததே இல்லையென்ற
உண்மை விவரம்
உலகே அறியும்!

எங்களுக்காக...
எவரையும் எதிர்ப்பாய்..!
எங்களைக் காக்க
உன்னையே கொடுப்பாய்!

எங்களை எதிர்க்க
எவருக்கும் பயம்..!
அது
அந்தக்காலம்..!

சிறைகளை நாங்கள்
சந்தித்து உண்டு!
வெளியெ நாங்கள்...
உள்ளே நீ...!

ஆனால் - இப்போது
உன் தம்பிகள் யாவரும்
உள்ளே... சிறைக்குள்ளே...
நம் தலைவர்கள் (?) யாவரும்
உல்லாசமாக... எதிரிகளோடு
சல்லாபம் செய்தபடி...
சந்தோசமாக...

போனால் போகட்டும்...
போய்த் தொலையட்டும்..
பிணம் தின்னும் கழுகுகளாலே
பயனொன்றும் இல்லை...
பேடிகள்.. கேடிகள்..
பிழைத்துப் போகட்டும்.. பாபா...!

பாபா...!
உன்னை
வீழ்த்தி விட்டதாய்
வெகுசிலர் நினைக்கலாம்!
ஒலி, ஒளிப் பேழைகளில்
ஒலித்துக் கொண்டும்
எங்கள் நெஞ்சில்
வாழ்ந்து கொண்டும் - நீ
இருக்கின்றாய் என்பதை
எத்தனைப் பேர் அறிவர்?

துக்கம் தொண்டையை
அடைக்குமு போதும்...
தூங்கிட உயிர்
மறுக்கும் போதும்...

கோழைகளைக் கண்டு மனம்
ஒல்தித்தெழும் போதும்...
நன்மை செய்ய
நினைக்கும் போதும்...
உண்மையைச் சொல்லி
விளக்கும் போதும்...

உந்தன் நினைவுகள்
எந்தன் நெஞ்சினில்
ஒவ்வொரு நாளும்...!
ஒவ்வொரு நாழிகையும்...!

பாபா...
வீரனாக வீழ்ந்து
வெற்றிக்கு வழிகாட்டினாய்..!

பாபா - நீ
விளைவித்த
விதைகள் நாங்கள்!
வீரமிக்கவர்கள்..
வீரியமிக்கவர்கள்...
விவேகமிக்கவர்கள்...!

பாபா - நம்
பசும்பொன் சொன்னாரே!
"விவேகமில்லாத வீரம்
முரட்டுத்தனம்!
வீரமில்லாத விவேகம்
கோழைத்தனமென்று!"

வீரத்துடனும் விவேகத்துடனும்
உன் வழிப்பாதையில்
வீழ்வது நாங்களெனினும்
வாழ்வது நன் சமுதாயமாக இருக்கட்டும்!

விரைவாய் வருவோம்..
விரைவில் வருவோம்...
வெற்றிக்கனியைப் பறித்துக்கொண்டு!

விண்ணும் மண்ணும் அதிர...
வானவர்கள் வாழ்த்தொலி முழங்க...
வரவேற்கத் தயாராய் இரு பாபா...!

ஜனவரி 28, 2002 அன்று பழனிக்கு அருகில் உள்ள புது ஆயக்குடியில் அடக்கம் செய்யப்பட்டுள்ள பழனி பாபாவின் ஐந்தாம் ஆண்டு நினைவுநாளில் அவரது மண்ணறையில் அமர்ந்து இனியவன் ஹாஜி முஹம்மதுவால் எழுதி வாசிக்கப் பட்ட கவிதாஞ்சலி.

Sunday, November 30, 2008

கவிக்கோவை (அப்துல் ரஹ்மானை) க் கண்டேன்!



அறிஞரைக் கண்டேன்
அகமகிழ்ந்து நின்றேன்!
கவிக்கோவைக் கண்டேன்
பெருமகிழ்வு கொண்டேன்!

அன்பைத் தந்தேன் - அவர்
அறிவைத் தந்தார்...
நட்பைத் தந்தார்...
நெஞ்சில் நிலைத்து நின்றார்!

இந்த
கவிக்கோவிடம் பாடம் கற்க
கவிஞர்களின் தொடர் வரிசை
தினம் தினம்...
தொடர்ந்து கொண்டிருக்கிறது!

அரசியல் களத்தில்
அவரில்லை என்றாலும்
அரசியல் சக்தி
அவரையும் சுற்றி இருக்கிறது!

ஏழு அதிசயங்களைப் பற்றி
கேள்விப் பட்டுள்ளேன்!
எட்டாவது அதிசயத்தை - அவரது
ஆறாவது விரலில் பார்த்தேன்!!!

- சென்னை, 21 - 09 - 2000

Tuesday, November 25, 2008

பனுவலியல் அராஜகத்திற்கு எதிராக சாருநிவேதிதாவின் புதிய நாவல்



Pathivu Toolbar ©2008thamizmanam.com


பனுவலியல் அராஜகத்திற்கு எதிராக சாருநிவேதிதாவின் புதிய நாவல் - பகுதி-3
சாருநிவேதிதாவின் முதல் நாவலான 'எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் பேன்ஸிபனியனும்' நாவலுக்கு 1990- பறை இதழில் எழுதிய விமர்சனம் இங்கு மீள்பதிவு செய்யப்படுகிறது.

3. பனுவலில் எதிர்கொள்ளப்படும் பாலியல் அரசியல் (*)
நாவலின் பகுதி இரண்டில் நாவலை எழுதும் சூர்யாவின் எரிக்கப்பட்ட பகுதிகள் என கிளிங்கோவிட்ஸால் நினைவு கூறப்படும் பகுதிகள் (பக். 100-148) சூர்யா என்ற நவீன எக்ஸிஸ்டென்ஷியலிச மற்றும் அறிவார்ந்த சிந்தனையாளனின் பால்ய கால இருட் பகுதிகள் (regime of silence) வெளிக்கொண்டுவரப்படுகின்றன. அவைகளை பட்டியலிடுவோம்.
1. ஓரினப் பணர்ச்சி - தனபால்-சூர்யாவுக்கு இடையில் நடைபெறுவது. 2. சுயமைதூனம் 3. வாய்வழிப் பாலுறவு - செட்டடியாரிடம் 15 வயது பெண், சூர்யாவிடம் புசாரி.4. உடலுறவு - நிறைய முறையற்ற, “தேவடியாள்களு”டன், உறவினர்களிடையோன 5. தூக்கத்தில் ஸ்கலிதமாதல் 6. யோனியில் முத்தமிடல் 7. துர்க்கையின் தலையில் மூத்திரம் பேய்தல்.

இவ்வுறவுகள் எல்லாம் சூர்யா என்ற அறிவுஜீவியின் நினைவிலி மனப்புலத்தை கடடமைக்கிறது. இளம் சூர்யாவின் உலகம் வர்க்கம்சாரா ஓரப்பிரிவினரின் வாழ்க்கையும், இருத்தலுமே ஆகும். நாவலின் முதல்மற்றும் இரண்டாம் பகுதி இத்தகைய “லும்பன்” பகுதியினரின் தோற்றம், வளர்ச்சி, இருத்தல் பற்றியே பேசப்படுகிறது.
சூர்யாவின் அப்பா கிருஷ்ணசாமி என்கிற தெலுங்கு பேசும் நாயுடுவின் எட்டு சகோதர, சகோதரிகளும் (கடைசிச் சகோதரியைத் தவிர) வீட்டை விட்டு சூர்யாவின் தாத்தாவால் விரட்டப்படுகிறார்கள். சமூகத்தின் பொருளியல் கொடூரங்களை எதிர்கொள்ள முடியாமல் சிதைவுற்ற வாழ்க்கைமுறையை ஏற்று வாழ்ந்துவிட்டு போகிறார்கள்.
சூர்யாவின் அம்மா பார்வதியின் 9 சகோதர, சகோதரிகளும். அதே பொருளியல் கொடூரங்களுடன் போராடி, குடும்பம் சிதைந்து “லும்பன்” வாழ்க்கையை நோக்கி நகர்த்தப்படுகிறார்கள்.

அடியாட்கள், குற்றவாளிகள், பாலியல் வேட்கையாளர்கள், பாலியல் பிறழ்ந்தவர்கள், போதை மருந்து கடத்தல், உட்கொள்ளல்... ஆகியவர்களாக சிதைக்கப்படுகிறார்கள். இவர்களும் சேர்ந்துதான் அக்காலத்தைய சமூக வரலாற்றை எழுதுகிறார்கள்.
இச்சிதைவுககு நாம் அனைவருமே காரணம்தான். இது ஏதோ சமூக அவலம் என்று புறக்கணிக்கக் கூடியதல்ல. ஏனென்றால், இச் சிதைவுகளினால் சமூக அமைப்பு உடைந்து விடாமல் சமநிலையை காப்பவர்கள் நாம் எல்லோரும்தான். இத்தகையவர்களை அவலத்திற்குரியவர்களாகவும், குற்றவாளிகளாகவும் இடம்மாற்றம் செய்வதன் மூலம் சீரழிவிற்கான குற்ற உணர்விலிருந்து விடுபட்டுவிடுகிறோம் நாம் (**). இதன் பின் புலத்தில்தான் பாலியிலின் அரசியல் செயல்படுகிறது.
என்பதை அறிந்துகொள்ள வேண்டும், பாலியல் என்பதும் அரசமைப்பின் அதிகாரத்தினைக்கொண்ட கட்டமைக்கப்பட்ட ஒரு கருவி என்பதை உணரவேண்டும். பாலியலுக்கும், மதத்திற்கும் உள்ள எதிர்மறை உறவை உடைத்து வாசிபப்தன் மூலம் இதை புரிந்து கொள்ளலாம்.
மதமும், பாலியலும் இரட்டைமுரண் எதிர் அமைப்புகளைக்கொண்ட அதிகாரம் செலுத்தும் கருவிகளாக செயலபடுகின்றன.
அதிகாரத்துடன் மதம் நேர்மறையான உறவையும், பாலியல் எதிர்மறையான உறவையும் கொண்டிருக்கின்றன. மதம் நேரடியான அறமதிப்பீடுகளைக் கொண்டு, பாவத்தை அறிக்கையிடல், கடவுளிடம் பாவமன்னிப்புக்கோரல், பரிகாரம் செய்வதன்மூலம் கடவுளை சாந்தப்படுத்துதல்... போன்றவற்றின் மூலம் மனிதனின் குற்றம் சார்ந்த நேரடியான அதிகாரத்தை நிலைநிறுத்துகிறது.
பாலியல் எதிர்மறையான அறமதிப்பீடுகளைக் கொண்டியங்குவதால் மனிதனின் குற்றம் சார்ந்த உணர்வுகளை ஒடுக்கி பதுக்குவதன் மூலம் அதிகாரத்தை நிலைநிறுத்துகிறது. மதம் பாலியலுக்கு எதிராக கட்டப்பட்டு நிலைநிறுத்தப்படுவதால் ஆதிக்கத்தின் மையக் கண்ணியாக பல நூற்றாண்டுகள் இருந்து வந்துள்ளது.
மதத்தின் ஆதிக்கத்தை எதிர்க்ககும் மனிதன் பாலியல் பிறழ்ச்சிகள் மூலம் அதை சாதிக்க முனைகிறான்.
நாவலில் சூர்யா சுயமைதூனம் செய்யத் தேர்ந்த இடங்கள் இருண்ட பிள்ளையார் கோவில், பேய்கள் நடமாடுவதாக நம்பப்படும் சுடுகாடு, புனிதமானதாகக் கருதப்படும் துளசிங்கப்பெருமாள்கோவில்... இவை மதம், மரணம் மற்றும் புனிதம் பற்றிய கருத்துத் திணிவுகளுக்கு எதிரானது என்பதைக் காட்டுகிறது.
‘அச்சம்‘ மற்றும் ‘குற்றம்‘ பற்றிய உணர்வுகள் மனித மனத்திற்கள் கட்டப்பட்ட ஆதிநிலை உணர்வுகள் என்பதும், அது சமூகத்தின் மையத்தில் செயல்படும் குற்ற உணர்வு, அச்சம் அகியவற்றின் வெளிப்படலே என்பதையும் சுட்டகிறது.
சூர்யாவின தங்கை ஆர்த்தி பேய் பிடித்து, மந்திரிக்கப்பட்டுள்ள நிலையில் தூய்மை காக்கவேண்டும் எனக் கூறப்பட்டபோது.. சூர்யாவுக்கு இரவு ஸ்கலிதமாகிறது.
ஒன்றைச் செய்யக்கூடாது என எதிர்மறை ஒடுக்குதல்கள் அதை செய்யும் தூண்டதலை நினைவிலி மனப்புலத்தில் ஏற்படுத்தி அதற்கு எதிராக இயங்க வைத்துவிடுகிறது.

பேய்களுக்குப் பயப்படும் சூர்யா துர்க்கையின் தலையில் மூத்திரம் பேய்கிறான். துர்க்ககைக்கும், பேய்களுக்கும் இடையிலான நுட்பமான வித்தியாசம் முக்கியமானது. பேயின் ஒரு தெய்வீக வடிவமாகவே துர்க்கை புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது.
பேய் அமானுஷ்யத் தன்மைகொண்டதாகவும், துர்க்கை தெய்வத் தன்மைக் கொண்டதாகவும் ஒரு முரண்நிலை நிலவுகிறது. பேயும், தெய்வமும் ஒரு நாணயத்தின் இரண்ட பக்கங்கள், ஆனால் ஒரே நாணயத்தில்தான் இருக்கின்றன. இப்படி ஒரு சமநிலை மதத்தால் காக்கப்படுவதனால்.. பேய்க்குப் பயம் உள்ளவன், துர்க்கையிடம் பயம் இல்லாதவனாக இருக்கிறான்.
ஏதோ ஒருவகையில் மதத்தின் அதிகாரத்திற்குள் பயம் சார்ந்த உணர்வகள் மூலம் மனிதர்கள இருத்தி வைக்க முடிகிறது.
பூசாரி என்ற புனித பிம்பம் (பார்ப்பான்) சூர்யாவிடம் தொண்டையில் முடிவளர்வதாகக் கூறி வாய்வழிப் பாலுறவு கொள்கிறான். வயதான செட்டியார் சூர்யாவின் பாலியல் ஆலோசகராய் உள்ளார்.
தாய் உறவுடையவர், மகன் உறவுடையவரிடமும், தந்தை உறவுடையவர் மகள் உறவுடையவரிடமும்.. முறையற்ற உடலுறவுகள் நிறைய பேசப்படுகின்றன.
இவை எல்லாம் சேர்ந்து கட்டமைக்கப்பட்டவன்தான் இன்றைய அறிவுஜீவி சூர்யா. இப்படிப் பதுக்கப்பட்ட மௌனங்களை உடைத்து பேச வைப்பதன் மூலம், மனிதன் பாலியல் ஒடுக்குதல்களிலிருந்து விடுபட்டு விடுதலைக்குரிய போராளியாகிறான்.
ஆதிக்கத்தின் சகல துறைகளையும் எதிர்த்து கலகம் செய்பவனாக கட்டமைக்கப்படுவான். பாலியல் வேட்கை, பிறழ்ச்சி பற்றிய உண்மையான அறிக்கையிடல்கள் (confessions) சொல்லாடல்கள் வெளிப்படுத்துவதன்மூலமே இன்றைய ஆற்றல்வாய்ந்த ஆதிக்கவெறி பிடித்த வாழ்க்கையை உடைத்தெறியமுடியும்.

இத்தகைய நிகழ்வுகளே இல்லை என்பது போல மெளனித்து இருப்பவர்கள் அதிகாரத்தின் முகமூடிகளை அணிந்துகொண்டு மனித உடல்களை அடக்கியாள்வதில் இன்பம் அடைபவர்கள். இவர்களே நாளைய பாசிசத்தின் கருத்துருவத்தூண்கள்.
இத்தகைய நிகழ்வுகளின் இருப்புகள் சமூகத்தின் அடித்தளத்தில் சலனமுறுவதை அனைவரும் அறிந்தே உள்ளனர். அவ்வகையில் இந்நாவல் பெரும் பாயச்சலைச் சாதித்துள்ளது.

இந்நாவலை எதிர்கொண்டு முகஞ்சுளிக்கும் 'முற்போக்காளர்களை'க் கொஞ்சம் கவனிப்போம். இந்நாவலின் பாலியல் கட்டுமானங்கள், மதவாதிகள், ஒழுக்கவாதிகள், அழகியல்வாதிகள் ஆகியோரை ஒருசேரத் தாக்குகிறது. இதை புரிந்துகொள்ள முடியாத முற்போக்காளர்கள் தாங்களும் பாலியலை பொறுத்தவரை அதே மதவாதிகள், நல்லொழுக்கவாதிகள் ஆதிக்கத்திலிருந்து விடுபடவில்லை என்பதைப் புரிந்துகொள்வதில்லை.

இப்படிப் பாலியல் பற்றி நாம் பேசுவதால் 'இவர்கள் அனைவரும் பாலியல் வக்கிர உணர்வுகள் உடையவர்கள்' என்ற மலினமான கருத்திற்குச் செல்பவர்கள் ஏற்படுத்தும் மாயையை அழிப்பதே நாவலின் அடுத்தமைந்த தளமாகும்.
இன்று அதிகாரப் பரவலைச் செய்யும் கருத்துருவ எந்திரங்களுடன் துணைக் கருவிகளாய் செயல்படுபவர்களே இந்த இணைக்கலாச்சார மாயையை ஏற்படுத்தும், சிறுபத்திரிகையாளன், இலக்கியவாதி, நாவலாசிரியன் ...etc.. etc.. ஆவார்கள். இவர்கள் ஏற்படுத்தும் மாயையை அழிப்பதில் நாவல கவனம் செலுத்தும் தளத்திற்கு செல்வோம்.

குறிப்புகள்.
(*) பாலியல் அரசியல் (Sexual Politics) பற்றி தமிழில் முதன்நிலை அறிமுகமற்ற சூழலில் இந்நாவலும் இக்கட்டுரையும் வெளிவருகிறது. பாலியலுக்கும், அரசயலுக்கும் இடையிலான உறவ பற்றியும், பாலியல் ஒரு விஞ்ஞானம் என்றரீதியில் பல ஆய்வுகளுக்கு உட்பட்டிருப்பது பற்றியும் நிறைய பேசலாம். ஆனால், கட்டுரையின் எல்லைக்கு வெளியே இருப்பதால் அது குறித்து மேலதிக விளக்கம் இல்லை.
பிராய்டு தொடங்கி இன்றைய பெண்ணிலைவாதிகள்வரை பாலியல் அரசியல் பற்றி கருத்துகளை ஆராய்ந்துள்ளனர். இங்கு பாலியலுக்கும், அதிகாரத்தழற்கும் இடையிலான உறவு பற்றிய கருத்துக்கள் பெரும்பாலும் மிஷேல் ஃபூக்கோவினுடையவை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

(**) 1960-களில் ஜெர்மனில் வெளிவந்த ஹ்யூபட் ஃபிக்ட் எழுதிய 'டீ பலேட்டா' என்ற நாவல் குறித்து 'மார்ஷல் ரைஷ்-ரானிக்கி' எழுதியுள்ள விமர்சனம் ஒன்று ஜெர்மானிய புத்திலக்கியம் என்ற நூலில் வெளிவந்துள்ளது. (1981 தென்மொழிகள் புத்தக நிறுவனம் - சென்னை) அந்நாவலில் நாயகன் யக்சி கூறுகிறான் "அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாலும், கொலை, பொய்மை, கொள்ளை, சிததிரவதை, கூட்டாக கொன்று குவித்தல், பொய்ச்சான்று புகலுதல், நீதிபதி பொறுப்பை தவறாக பயன்படுத்துதல்,ஆசிரியர் பொறுப்பை தவறாக பயன்படுத்துதல் ஆகியவற்றில் ஈடுபடுவதாலும் குற்றவாளி வர்க்கத்தில் சேராமல் தப்பித்துக் கொண்டவர்களை மனதில் கொண்டு பார்த்தால், குற்றவாளி வர்க்கத்தில் சேர்ந்திருபப்தே பெரும் கெளரவம் என்று தோன்றக்கூடும்" (பக். 384)

(அடுத்தது நிறைவு பகுதி) -ஜமாலன் (பறை-1990.)
image : CRANACH, Lucas the Elder - Adam and Eve - 1528
இடுகையிட்டது ஜமாலன் நேரம்
document.write(tamilize('11/26/2008 09:34:00 AM'))

லேபிள்கள்: , , ,

Thursday, November 13, 2008

மதப் போராட்டத்தின் பின்னணி என்ன?



தோழர்களே! இன்று இந்தப் பரந்த இந்திய கண்டத்தில் இமயம் முதல் கன்னியாகுமரி வரையில் -அநேகமாக எல்லா முக்கிய நகரங்களிலும், சிற்சில கிராமங்களிலும் கூட பல தரப்பட்ட குறிப்பாக, இந்து -முஸ்லிம் கலவரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. நடக்காத இடங்களில் நடக்கும் படியாக அரசியல் தலைவர்களும் மதத் தலைவர்களும் பொறுப்பற்ற கலகக்காரர்களும், அரசியல் தேசியப் பத்திரிகைகளும் தூண்டிவிட்டுக் கொண்டிருக்கின்றன.தமிழ் நாட்டில் இந்து -முஸ்லிம் கலகம் அதிகமில்லையானாலும் இப்போது நன்றாய் விதை ஊன்றப்படுகிறது.


பழைய காலத்தைப் போலவே, ஆரியர் -திராவிடர் போராட்டம் வெகு நாட்களாக நடந்து கொண்டு இருக்கின்றது. இவை யாவும் இதுவரை அரசியல் போர்வையில் இருந்து கொண்டு போரிட்டு வந்தாலும் -இன்று பச்சையாய் ஜாதி மதப் போராட்டம் தான், இதுவரை நடந்துவந்த அரசியல் போராட்டம் என்பதாக ஆகிவிட்டது.கிறித்துவ மதமும், இஸ்லாமிய மதமும் ‘ஒரு கடவுள்தான் உண்டு, மக்களில் ஒரு சாதிதான் உண்டு' என்று சொல்கின்றன.
ஆனால், அவர்கள் இருவர் அல்லாத இந்த நாட்டு மக்கள், ஆரியப் பழங்காலக் காட்டுமிராண்டி மதத்தைச் சேர்ந்தவர்கள் -பல கடவுள்களைக் கற்பித்துக் கொண்டு, மக்களில் பல சாதிகள் இருப்பதாக ஏற்பாடு செய்து கொண்டு நடைமுறையிலும், அது போலவே பல கடவுள்களையும் அக்கடவுள்களுக்கு உருவங்களையும் வைத்து பூசை செய்து கொண்டு, பல சாதியாகப் பேதப்படுத்தி நடத்தி -ஒரு சாதியை மற்றொரு சாதி அழுத்தி அடக்கி ஆண்டு வருகிறது.
இந்த நிலை இஸ்லாம், கிறித்துவம் அல்லாத இந்து மதத்திற்கு அடிப்படையிலேயே மாறுபட்ட நிலையாக இருப்பதோடு, இந்த இழிதன்மையில் உள்ள மக்கள், அறிவு வளர்ச்சியும் மனிதத்தன்மையும், மான உணர்ச்சியும் கொண்டால் -எந்த மனிதனும் தன்மதத்தைத் தானே இகழவும், வேறு மதத்தை சாடவும் நினைத்துத்தான் தீருவான்.


ஆதலால், மதம் மாறும் உணர்ச்சி ஏற்படாமல் இருக்கவும், இன்றைய காட்டு மிராண்டி நிலையைப் பாதுகாக்கவும் செய்யப்படும் முயற்சிகள் தான் -பெரிதும் இன்று மதப் போராட்டமாகவும் அரசியல் போராட்டமாகவும் இருந்து வருகின்றன.ஆகவே மதத்தை வைத்து, மதப்போர்வை போட்டுக் கொண்டு மற்ற மக்களை ஏமாற்றி, மேன்மையாக வாழும் மக்கள்தான் இது விஷயத்தில் கவலைப்படுவார்களே தவிர, சாதாரண யோக்கியமான உணர்ச்சியுள்ள மனிதன் எவனும் -ஒருவன் வேறு மதத்திற்குப் போகிறானே என்று கவலைப்பட இடமேயில்லை என்பதோடு, ‘எப்படியாவது அவனுக்குப் பறப்பட்டம், சூத்திரத் தன்மை போனால் நலம்' என்போம்.
இந்து ஆட்சி ஏற்பட்டு விட்டதாலேயே, ராம ராஜ்யம் ஏற்படுவதாலேயே -நமது சூத்திரத் தன்மையும், பஞ்சமர், கடைசாதித் தன்மையும் மாறிவிடப் போவதில்லை. நம்மில் இருந்து இஸ்லாமாக மாற்றப்பட்டவர்களும், கிறித்தவர்களாக மாற்றப்பட்டவர்களும் அல்லது தானே மாற்றம் அடைந்தவர்களும் இன்று எதில் கஷ்டப்படுகிறார்கள்? எதில் கெட்டுப் போய்விட்டார்கள்?


ஆகவே, ஓர் இந்து வேறு மதத்திற்குப் போவதென்றால், மாற்றப்படுவதென்றால், கடை சாதியான் மேல் சாதியாக ஆக்கப்பட்டான் என்றுதான் அர்த்தம்.-1946இல் சென்னையில் திப்பு சுல்தான் நினைவு நாளில் பங்கேற்று பெரியார் ஆற்றிய உரை, ‘குடி அரசு' -16.11.1946