Friday, November 7, 2008

எங்கள் இந்திய தேசம்!




இனம், மொழி, வழி பலவாயினும்
இணைந்தே வாழும் இந்திய தேசம்..
இந்து, முஸ்லிம், கிருத்துவர்கள்...
இணை பிரியாத எங்கள் தேசம்!

விந்திய மலை போல் வீழ்ந்திடாத
வீரமும், வலிமையும் மிகைத்த தேசம்..
மண் வளமும், மனித வளமும்
மிகத்தே நிற்கும் மாண்புறு தேசம்!

வேற்றுமையில் ஒற்றுமை காணும்
வித்தியாசமான வியப்புறு தேசம்..
ஆற்றுமை, ஆற்றாமை இருந்திடினும்
இயல்பாய் வாழும் இன்புறு தேசம்!

கட்சிகள், காட்சிகள் கலைந்திருந்தாலும்
காண்போர் கண்படும் களிப்புறு தேசம்..
கனவுகள் நனவுகளாய் ஆகாவிடினும்
கனிந்தே வாழும் விழிப்புறு தேசம்!

நதிகள் இணைந்து, நன்மைகள் வளர்ந்து
மதவெறி மாய்ந்து, மனிதம் மலர்ந்து..
ஏழ்மை நீங்கி.. தேசம் ஏற்றம் பெற்றிட
எடுப்போம் சபதம்.. இன்றே நாமும்...!!!

-எண்ணம்: இனியஹாஜி, இடம்: சோழபுரம், நவம்பர் - 2001

No comments: